விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் முழு அடைப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகின்றது.
குறித்த போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் ஒரு இலட்சம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துக்கொண்டுள்ளன.
வணிகர் சங்கங்களும் முழு ஆதரவளித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.
மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் கணிசமான அளவில் இயங்கும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக குறித்த போராட்டத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.