Breaking News

வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்)

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும்
முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் தெரியவருகின்றது.

இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது த.தே.கூட்டமைப்போ இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதோடு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் த.தே.கூட்டமைப்பை பற்றி எழுதுவதற்கு பின்னடிப்பதையும் தமிழ்கிங்டொம் இங்கு சுட்டிக்காட்டுகின்றது.

இது தொடர்பாக முகநூலில் பல செய்திகள் வெளியாகியிருந்தபோதும் முன்னணி இணையங்கள் எவையும் இதனை பிரசுரிப்பதற்கு பின்னடிப்பதோடு இது தொடர்பான ஆதாரங்களை சிங்கள இணையத்தளமொன்று முதல்முதலில் வெளியிட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வற்காக சென்ற தூதுக்குழுவில் துணை வெளிவிவகார அமைச்சர் ஹர்சா டி சில்வா உடன் சிவஞானம் சிறிதரன், அலி மௌலானா, சுனில் கந்துடநெற்றி, நலிந்த ஜயதிஸ்ஸ, நிகால் கலப்பதி, வாசுதேச நாணயக்கார, ஹர்சானா ராஜகருணா, கவிந்த ஜெயவர்த்தனா, ஹெக்ரர் அப்புகாமி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

தொடர்ந்து வரும் சிறிலங்கா அரசின் அடக்குமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்துவற்காக ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழர்அமைப்புகளும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் கோரிவந்த நிலையில் மறைமுகமாக கூட்டமைப்பினால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழர் தாயகம் எங்கும் நடைபெற்ற ஹர்த்தால் நிகழ்வுக்கு வெளிப்படையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க அறிவித்த சமநேரத்தில் கூட்டமைப்பினர் அரசுக்கு ஆதரவான இன்னொரு நடவடிக்கையை செய்துள்ளமை தற்போது உறுதியாக தெரியவந்துள்ளது.

மேலும் நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்விலும் தமிழ் மக்களை ஏமாற்றும் இன்னொரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் எனவும் இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு தாமதம் காட்டி வருகின்றது மேலும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன போன்ற விடயங்களை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மறுக்குமாறு கோரியுள்ளனர்.






இலங்கை அரசு சார்பில் பெல்ஜியத்திற்கு சென்றுள்ள குழுவின் தலைவரான ஹார்சா டி சில்வா ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு பரந்த ஆதரவு இருந்ததாகவும், சில அமைப்புகள் மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டிருந்த போதும், அவர்களோடு தானும் தனது குழுவினரும் தொடர்புகொண்டு; உரையாடி; அவர்களுக்கு அரசின் நல்லாட்சி, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள், மீளுறவை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் அரசு மேற்கொண்ட முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுத்துக்கூறி; அவர்களை வென்றெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இம்முறை ஐ.நாவில் பேசியபிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை




இதே சமயம் வழமையாக சிறிதரனை அழைக்கும் புலம்பெயர் சமூக ஆதரவு அமைப்புகள் பிரஸல்ஸில் இலங்கை அரசுக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்ற போராட்டத்தை முன்னெடுக்கின்றன. பிரித்தானிய தமிழர் பேரவை இது தொடர்பான கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்