அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்காக 60 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் முடிவடைய முன்னர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனர்த்தத்தில் அழிவுற்ற மொத்த சொத்துக்களின் பெறுமதி 109 பில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் தென்னிலங்கையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களை நேற்று சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
சேதங்களை சரிசெய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் பூர்த்தி செய்து வருகின்றது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதாரத்தை முன்னெடுக்கும் வகையிலும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
எனினும் பெரும்பாலான வேலைத்திட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த வேலைத்திட்டங்கள் முழுமையாக நிறைவுக்கு கொண்டுவரப்படும். இந்த வேலைத்திட்டங்களில் தாம தம் ஏற்படுத்தக் கூடாது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார மாற்று நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
அவர்களுக்கான வியாபாரங்களை முன்னெடுக்க நிதி உதவிகளை வழங்க வேண்டும். இரண்டு வார காலத்தினுள் இந்த நிதி உதவிகளை அரசாங்கம் வழங்கும். செப்டெம்பர் மாதம் முடிவடையும் போது மக்களின் இந்த பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.
அதேபோல் அனர்த்தங்களின் போது பாதுகாப்பாக இருக்கும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். எனி னும் இம்முறை மக்கள் பாதிக்கப்பட்ட போதும் அரசாங்கம் சரியான முறையில் செயற்பட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிகைகளை கையாண்டது.
அரச நிறுவனங்களின் உதவியுடன் பாதுகாப்பு படைகளின் முழுமையான ஈடுபாட்டில் நாம் சரியாக செயற்பட்டோம்.
கடந்த கால வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நாம் இழந்த சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 109 பில்லியனாகும். இந்த 109 பில்லியன் ரூபாவை நாம் எவ்வாறாயினும் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
2017 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் 60 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும். ஆகவே இது தொடர்பில் ஆராய வேண்டும் என நான் தெரிவித்துள்ளேன்.
சேதமடைந்த வீடுகள், சொத்துகள் தொடர்பில் உரிய மக்களுக்கு நிவாரணம் வழங்கவே இந்த நிதித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பாதைகள், மின் கம்பங்கள், கிணறுகள், பாடசாலைகள் என்பவற்றை புனர்நிர்மாணம் செய்ய 30-35 பில்லியன் ரூபாய் செலவாகும்.
எவ்வாறு இருப்பினும் இழந்த சொத்துக்களுக்கான 109 பில்லியன் ரூபா பெறு மதியை நாம் எந்த வழியிலேனும் பெற் றுக்கொண்டு முழுமையான இந்த செயற்பாடுகளை கையாள வேண்டும்.
இப்போது நாம் 60 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு எஞ்சிய நிதியை நாம் ஒதுக்க முடியும். எவ்வாறு இருப்பினும் படிப்படியாக நாம் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். மக்களின் பிரச்சினை களை விரைவில் தீர்க்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளார்.








