வைகோ மீதான தாக்குதல்!- அனந்தி கண்டனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீதான தாக்குதல் முயற்சியானது ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சி என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீவிர தமிழீழ ஆதரவாளராகவும் ஈழத்தமிழர்கள் மீது மாறாப் பற்றாளராகவும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அயராது செயலாற்றிவரும் அண்ணன் வைகோ அவர்கள் மீதான சிங்களக் காடையர்களின் தாக்குதல் முயற்சியை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
நாதியற்ற இனமாக கையறுநிலையில் நின்று நாம் மேற்கொண்டுவரும் நீதிக்கான போராட்டத்தில் தோள்கொடுத்து பலம் சேர்க்கும் விதமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்று, ‘சுதந்திர தமிழீழம்’; குறித்த பொதுவாக்கெடுப்பை ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டுமென உரிமை முழக்கம் எழுப்பியிருந்தார்.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போரின் நேரடிப் பங்குதாரராகத் திகழ்ந்துவரும் இலங்கை அரசாங்கம் அதற்கான பொறுப்புக் கூறலை தவிர்த்துவருவதுடன் காலம் கடத்தி நீர்த்துப்போகச் செய்யும் தந்திரத்துடன் செயற்பட்டு வருகின்ற நிலையில் நீதிக்கான எமது குரலையும் ஏதோவொரு வகையில் நசுக்கவே முற்பட்டுவருகிறது.
அந்த வகையில், எமக்கு ஆதரவாக உரிமைக் குரலெழுப்பி உலகின் கவனத்தை ஈர்ந்த அண்ணன் வைகோ அவர்கள் மீது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வைத்தே தாக்கமுற்பட்டமை இதன் நீட்சியாகவே அமைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் எதிரொளியாக அண்ணன் வைகோ அவர்களின் பாதுகாப்பிற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் இரண்டு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை நிலைமையின் விபரீதத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இதுபோன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் அநாகரிகமான செயற்பாடுகளை முற்றிலும் தவிர்த்து மனித மாண்புகளை காப்பாற்றுமாறு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.” என அனந்தி குறிப்பிட்டுள்ளார்.








