முதலமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களால் முதலமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செலவுடன் முதல் நிலையிலேயே தள்ளுபடி
தன்னை அமைச்சர் அவையில் இருந்து நீக்கியது சம்பந்தமாக முறையிட்டு முன்னைய அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களால் முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் தெஹிதெனிய அவர்களாலும் நீதியரசர் அமரசேகர அவர்களாலும் செலவுடன் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை நடாத்தக் கூடிய சட்ட ரீதியான காரணங்கள் எதுவுமே இல்லாதபடியினால் முதலமைச்சருக்கு அறிவித்தல் கொடுக்காமலே செலவுடன் வழக்கு முதல்நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.
திரு.டெனீஸ்வரன் அவர்கள் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ அவர்களும் எதிர்வாதி வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிடெல் அவர்களுடன் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சுமந்திரன் அவர்களும் முதலமைச்சர் சார்பில் சட்டத்தரணி திரு.மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் சட்டத்தரணி திரு.ஜெயக்குமார் அவர்களுடன் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.கனகஈஸ்வரன் அவர்களும் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கில் அமைச்சர்களை நியமிப்பது ஆளுநருக்கே உரித்தான அதிகாரம் என்றும் முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் திரு.டெனீஸ்வரன் சார்பிலும், வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் சார்பிலும் அவர்களுடைய சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்திருந்தமை எல்லோரும் அறிந்ததே. அந்த வாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








