மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரவா முயல்கிறீர்கள்
சுரேஷ், கஜேந்திரன், சிவாஜிலிங்கத்திடம் டிலான் பெரேரா கேள்வி
ஜனாதிபதியின் யாழ்.விஜயத்திற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவை பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா என்று நாங்கள் நேரடியாகவே அவர்களிடம்
கேள்வி எழுப்புகின்றோம் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாவிடின் இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியி்ன் யாழ். விஜயத்தின்போது அவருக்கு எதிராக இடம்பெற்ற கறுப்புப்பட்டி போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களை ஜனாதிபதி நேரடியாக சந்தித்தமை தொடர்பில் விபரிக்கையிலேயே டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்மொழித்தின விழாவில் கலந்துகொள்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலர் இணைந்துகொண்டு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் தனது நாட்டு பிரஜைகள் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதனை அறிய ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்தார். அவர்களை சந்தித்த ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற தொனியில் கருத்து வெ ளியிட்டிருக்கின்றனர்.
இதனை நாங்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றோம். ஜனாதிபதி தனது நாட்டு பிரஜைகளின் பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்வதற்கே ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார்.
ஆனால் அவர்கள் ஜனாதிபதியை அசௌகரியப்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர். தற்போது தெற்கில் ஜனாதிபதி வடக்கில் இனவாதிகளிடம் மண்டியிட்டதாக பிரசாரம் செய்கின்றனர்.
இந்த நிகழ்வை தெற்கில் இனவாதிகள் கொண்டாடியிருப்பார்கள். மறுபுறம் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரிடம் நான் ஒரு கேள்வியை எழுப்புகின்றேன்.
அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லை எனின் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர்கள் பேச்சு நடத்த விரும்புகின்றனரா? என்று கேட்கிறேன்.
அதாவது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவர இவர்கள் விரும்புகின்றனரா?
இந்தக் கேள்விக்கு இவர்கள் மூவரும் பதிலளிக்கவேண்டும். நாங்கள் அதிகாரத்தைப் பகிரவேண்டுமென்றும் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகின்றோம். இவ்வாறான சூழ்நிலை யில் ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு இவர்கள் தடை ஏற்படுத்துவது தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது என்ற தென்னிலங்கை இனவாதிகளின் கூற்றை வலுப்படுத்துவதாக அமைந்துவிடும்.
தற்போயை ஜனாதிபதியின் காலத்தில் மட்டுமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியும். இதன் பின்னர் இதுபோன்றதொரு சந்தர்ப்பம் கிடைக்காது. அதனால்தான் இறுதி பஸ்ஸுக்காக காத்து நிற்கின்றோம் என நான் அடிக்கடி கூறுகின்றேன்.
ஆனால் வடக்கு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை பார்க்கும்போது இறுதி பஸ்ஸையும் தவறவிட்டுவிடுவார்கள் போல் தெரிகிறது.
எனவே மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தை கொண்டுவருவதற்கா வடக்கின் ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்ற எனது கேள்விக்கு பதில் தேவைப்படுகின்றது.
எனது கேள்விக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய மூவரும் பதிலளிப்பார்கள் என நம்புகின்றேன் என்றார்.








