சில தினங்களில் பாரிய மாற்றங்கள் - ஜனாதிபதி
வெளிவந்துள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரமாக சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சில தினங்களில் பாரிய மாற்றங்களை நிகழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளி மாவட்டங்களில் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு வரழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கு அடுத்தக்கட்ட நகர்வுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த அனர பிரியதர்ஷன யாப்பா நிமால் சிறிபால டி. சில்வா ஜோன் செனவிரட்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக இதன்போது உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய சில நாட்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்போது ஒரு சில எம்.பி. சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கூறியதுடன் மேலும் சில எம்.பி. க்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டுமென தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தின்போது ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சில தினங்களில் பாரிய மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாள ரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா.
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியதுடன் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளன.
சுதந்திரக் கட்சியானது நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளதையடுத்தே நேற்று ஜனாதிபதி அவசரமாக சுதந்தி ரக் கட்சி அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.