Breaking News

யாழ் மாநகர மேஜருக்கும் பொலீஸ் பாதுகாப்பு தேவையாம்

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட்
தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு கடிதம் மற்றும் வைபர் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கு செய்தியாளர் சந்திப்பை, முதல்வர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்தி இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை எனக்கு முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்ததாகவும், மூன்று பேருக்கு இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சாளர், சயந்தன் மற்றும் ஆனல்ட் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அன்று சாவகச்சேரி இந்துவில் (சயந்தனை) இலக்குவைத்தார்கள், பிழைத்துவிட்டது. இப்பொது உங்களை இலக்கு வைத்துள்ளார்கள். கொஞ்ச நாள் மறைந்திருப்பது நல்லது என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

கம்பன் கழக கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம். இராமநாதன் பொல்லாதவர். மாறியிருப்பது நல்லது. எதிரிகள் பல பேர், கவனம். அங்கேயும் உள்ளனர். லேசாக எடுக்கவேண்டாம்“ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மறுநாள் 16ஆம் திகதி எனது மனைவியின் தொலைபேசியின் வைபர் செயலிக்கு தகவல் ஒன்று வந்தது. ரெடி (Ready?) என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், இரண்டு தவறிய அழைப்புகளும் வந்திருந்தன.

மீள அழைத்த போது, பதிலளிக்கப்படவில்லை. உடனடியாகவே மூத்த பொலிஸ் அத்திட்சகருக்கு அறிவித்தேன். அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை அனுப்பி என்னிடம் விவரங்களைப் பெற்றிருந்தார்.

கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வில் தொடக்கவுரை என்னுடையதாக இருந்தது. அந்த விழாவில் பங்கேற்கவேண்டாம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் விளக்கம் என்ன என எனக்குப் புரியவில்லை. எனினும் அன்றைய நிகழ்வில் பங்கேற்க எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதுவரையில் எனக்கு எதிரிகள் எவரும் இல்லை. அண்மைக்காலமாக மாநகரத்துக்குள் ஏற்பட்ட சில அத்துமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்கள் இருந்தன.

எனக்கு வந்த அச்சுறுத்தலில் நபர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாநகரத்துக்குள் ஏற்பட்ட அத்துமீறல்களைத் தடுக்க கூடுதலான அக்கறை எடுத்து செயற்படுவதனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

எனவே எனது கடமைக்கும் போக்குவரத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பைக் கோரத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இதேவேளை, தற்போது கரவெட்டி பிரதேசசபை உறுப்பினராக உள்ள சதாசிவம் இராமநாதனின் சகோதரரின் பெயரிலேயே ட்ரைமாஸ் மீடியா நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனமே, யாழில் உள்ளூராட்சி சட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி சட்டவிரோத கேபிள் கம்பங்களை நட்டு வருகிறது. யாழ் மாநகரசபை எல்லைக்குள் நடப்பட்ட சட்டவிரோத கம்பங்கள், மாநகரசபை முதல்வரின் உத்தரவில் பிடுங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.