Breaking News

சூதாட்ட கிளப்பாக மாறிய நடிகர் ஷியாம் வீடு - நள்ளிரவில் ஷியாம் அதிரடி கைது!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சீட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் திரைப்பட நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

குஷி படத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக திரையுலகத்துக்குள் நுழைந்தவர் ஷ்யாம். அதன் பிறகு 12 பி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு, தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘இயற்கை’ படம் ஷியாமுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஷியாம் வசித்து வருகிறார் . இங்கு, இரவு நேரத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அடிக்கடி வருவதாகவும் குதூகலத்தில் ஈடுபடுவதாகவும் அக்கம்பக்கத்தில் வசித்த குடியிருப்பு வாசிகள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் துறை உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படைப் போலிசார் நேற்று நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.  

சோதனையில், வீட்டுக்குள்ளேயே சூதாட்ட கிளப்பை செயல்பட்டது தெரிய வந்தது. வீட்டிலிருந்த சீட்டுக்கட்டுக்ள், பணம் போன்றவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் நடிகர் ஷியாம், வழக்கறிஞர்கள், இன்சூரன்ஸ் அதிகாரி, திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், உணவக உரிமையாளர்கள் என்று 13 பேரைப் போலிசார் கைது செய்தனர். பிறகு போலிசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளரான நடிகர் ஷியாம் தான் சூதாட்டக்கும்பலுக்கு தலைமை என்பது தெரியவந்தது.  



சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக, கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட 13 பேரும் நள்ளிரவு நேரத்தில் ஜாமீன் பெற்று வீடுதிரும்பி விட்டனர்.