Breaking News

இலங்கைக்குள் மீண்டும் கொவிட் பரவியது எப்படி? கசிந்தது புலனாய்வுத் தகவல்!

இலங்கையில் இரண்டாவது கொரோனா பரவல் ஏற்பட காரணம் துருக்கி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த யுக்ரேன விமான சேவை ஊழியர்களிடம் இருந்தே என புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

தெரண ஊடக வலயமைப்பிற்குச் சொந்தமான ‘அருண’ பத்திரிகையில் இது தொடர்பில் விசேட தகவல் வௌியிடப்பட்டுள்ளது. அது வருமாறு,   

கொரோனா இரண்டாம் அலையின் மூலகாரணம் இதோ!  

“இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை என சொல்லப்படும் பிரன்டிக்ஸ் கொரோனா அலை துருக்கியில் இருந்து இலங்கைக்கு வந்த யுக்ரேன் விமான சேவையாளர்கள் ஊடாக பரவியுள்ளதென புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.  

இது தொடர்பான புலனாய்வு அறிக்கை அரச புலனாய்வு பிரிவு ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.  

செப்டெம்பர் 11ம் திகதி இந்த யுக்ரேன் விமான சேவை ஊழியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். 11 பேர் கொண்ட இந்த குழுவினர் சீதுவையில் உள்ள நட்சத்தர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  

விமான சேவை ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தல் செய்யப்பட்டதால் குறித்த ஹோட்டல் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.  

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த யுக்ரேன் விமான சேவை ஊழியர்களுள் ஒருவருக்கு செப்டெம்பர் 13ம் திகதி கொரோனா தொற்று காரணமாக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் ஏனைய யுக்ரேன் நாட்டு விமான சேவையாளர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  

60 ஹோட்டல் ஊழியர்களில் 18 பேர் தினமும் வீடு சென்றே ஹோட்டல் பணிக்கு வருகின்றனர். குறித்த 18 பேரும் செப்டெம்பர் 11ம் திகதியில் இருந்து 13ம் திகதிவரை வீட்டிற்கு சென்றே சேவைக்கு வந்துள்ளனர்.  

ஹோட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஹோட்டல் நிர்வாகம் ஊழியர்களை வீடு செல்ல அனுமதித்துள்ளது.  

தினமும் வீடு சென்று ஹோட்டல் சேவைக்கு வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  

இதில் மூவர் செப்டெம்பர் 11ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை ஹோட்டலில் சேவை புரிந்தவர்கள். ஹோட்டலில் ஆடை சுத்தம் செய்பவரும் இதில் உள்ளடங்குகிறார். இந்த நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் முன்னரைவிட அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னர் 15 தொடக்கம் 18 சதவீத அளவு வைரஸ் உடலில் இருந்தது.  

ஆனால் இந்த புதிய தொற்று ஊடாக உடலில் 29 தொடக்கம் 31 சதவீத வைரஸ் பிரன்டிக்ஸ் தொற்றாளர்களிடம் இருந்தது. ஹோட்டல் ஊழியர்கள் பிரன்டிக்ஸ் ஊழியர்களுடன் தொடர்பை பேணியதால் இந்த வைரஸ் பரவல் நிலை ஏற்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது’ என சிரேஸ்ட விசாரணை அதிகாரி குறிப்பிட்டார்.  

யுக்ரேன் விமான சேவை ஊழியர்கள் ஊடாக கொரோனா தொற்று ஏற்பட்ட ஹேட்டல் ஊழியர் ஒருவர் சிலாபத்தில் இருந்து பொது போக்குவரத்தில் தினமும் சீதுவை ஹோட்டலுக்கு வந்து சென்றுள்ளார். பிரன்டிக்ஸ் ஊழியருக்கு செப்டெம்பர் 21ம் திகதி கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 16ம் திகதியே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும்.  

ஒக்டோபர் 5ம் திகதி முதலாவது பிரன்டிக்ஸ் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார். முதல்கட்ட அலையைவிட இம்முறை பல மடங்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.  

இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து இலங்கை மத்தல விமான நிலையத்திற்கு வந்த 48 பிரன்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் ஊடாகவே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதென கூறப்பட்டது.  

ஆனால் அவர்கள் விசாகப்பட்டினம் பிரன்டிக்ஸ் கிளையில் பணியாற்றிய இலங்கையர்கள் எனவும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட போது அவர்கள் தென்பகுதி ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பின்னர் தெரியவந்தது.”  

இவ்வாறு அருண பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.