Breaking News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானம்!


தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் 19 புதிய வைரஸின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (22) முடிவு செய்துள்ளார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான நேற்றைய (22) சந்திப்பின் போது கோவிட் புதிய வைரஸ் மற்றும் அதன் பரவலை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இன்று வரவுள்ள பயணிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு சுகாதாரத் துறையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.  

லண்டனில் இருந்து வரும் சரக்கு விமானங்களின் பணிக் குழுவினரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுவர்.  

நேற்றைய கலந்துரையாடலின் போது, ​​கோவிட் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் கோவிட் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.  

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.  

தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.  

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரிகள் மற்றும் கோவிட் குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.  

ஜனாதிபதி ஊடகப் பிரிவு  

2020.12.22