Breaking News

எரிபொருளுக்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றினால் அபராதம்!

 


எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும். பின்னர் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் இந்த தண்டனையை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1984 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டம், 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் வாகன வாகன சட்ட திருத்தத்திற்கு அமைவாக முதல் தடவையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 15,000 ரூபாய்க்கு குறையாத மற்றும் 20,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும், இதே குற்றச்சாட்டை இரண்டாவது முறை அல்லது அதற்கு மேல் மேற்கொள்ளும் நபருக்கு 30,000 ரூபாய்க்கு குறையாத ஆனால் 50,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

வாகன இலக்கத் தகடுகளுக்கு அமைய எரிபொருள் விநியோகிக்கப்படும் முறை நேற்று முன்தினம் (21) ஆரம்பமானது. அந்த சந்தர்ப்பத்தில் சிலர் வாகன இலக்கத் தகடுகளை மாற்றி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்தமை குறித்து சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக இருந்தது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)