Breaking News

தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது? சஜித் கேள்வி!



2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள வேளையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது அரசின் பொறுப்பாகும்  என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிதியை வழங்காதது ஓர் சிறப்புரிமை மீறலாகும் எனவும், உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவைக் கூட வழங்கியுள்ளதாகவும், இதற்கேற்ப செயற்படாதது ஜனநாயக விரோத செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நிதியை வழங்கியவுடன் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரச அச்சகம் கூட்டுத்தாபணம் தயாராக இருக்கும் போது, உரிய நிதியை விடுவிக்காததற்கு என்ன காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.