Breaking News

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி 100-வது வயதில் மரணம்!

 


லிதியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது. செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார். 

வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். 1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 

1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 

2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.