Breaking News

தமிழரசுக் கட்சியின் தலைமை மாவை ''சேனாதி'' மட்டுமே


தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு
பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவே பொருத்தமானவர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்கவுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், வடமாகாண ஆளுநரின் மீள் நியமனம் காரணமாக முதலமைச்சர் பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பெரிய பதவியை குறிவைக்கின்றார் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

இந்த விடயங்கள் பொய் எனத் தெரிந்த பின்னர் அதே கதையைக் கூறியவர்கள் நான் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரவுள்ளதாக கூறுகின்றனர். அப் பதவியை நான் பொறுப்பேற்பேன் என எவருமே நினைக்கக் கூடாது.

உண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மாவை.சேனாதிராசாவே வரவேண்டிவரும், வரக்கூடியவராகவும் உள்ளார். தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அவரே தமிழரசுக் கட்சியை நீண்டகாலமாக கட்டிவளர்த்த பெருமைக்குரியவர் இதனை நான் உறுதியாக கூறுகின்றேன்.

நான் அறிந்தவரையில் கட்சியில் தலைமைகளும் அவ்வாறே கருதுகின்றனர். இவ்வாறான கதைகளைப் பரப்புவதன் மூலம் சிலர் கட்சியைச் சிதைக்க எடுக்கும் முயற்சியை முறியடித்து மாவை.சேனாதிராசாவிற்கு நான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.