Breaking News

மகிந்தரின் கையாளே வெளிநாட்டு நிபுணர் குழு தலைவராம்- ஆதாரம் இணைப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளே போர்க் குற்றங்களில்
ஈடுபட்டனர் என்று 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் கருத்துரை வழங்கிய டெஸ்மன் டீ சில்வாவே, காணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கை வெளிநாட்டு தூதரகமொன்றில் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக் கருத்தரங்கும் இரவு கேளிக்கை நிகழ்வும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு சட்டத்தரணியான டெஸ்மன் டீ சில்வா கருத்துரை வழங்கியிருந்தார்.

அவர் தனது கருத்துரையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை (தருஸ்மன்) உண்மைகளைக் கண்டறியவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

போர் நடைபெற்ற போது 3 லட்சம் பொதுமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் யாராவது தப்பிச் செல்ல முற்பட்டால் புலிகள் சுட்டு படுகொலை செய்தனர். எனவே விடுதலைப் புலிகள்தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் நடந்ததில்லை. பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையின் போது,உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் இலங்கை அரசு இராணுவச் சட்டத்தின் பிரகாரமே அந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த விடயங்களை தருஸ்மன் அறிக்கை கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று டெஸ்மன் டீ சில்வா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கருத்து வெளியிட்ட நபரே காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.