Breaking News

மிஸ்டர் பிரபாகரன் என்று சந்திரிக்கா கூறியது தவறு - கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவு அற்றவர் என்றும் அதேபோல் ரணில், பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் அறிவு அற்றவர்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு சிங்கள அரச தொலைக்காட்சியில் நேரடி செவ்வியில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட கோத்தபாய,

சந்திரிக்கா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்றும் இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ராஜபக்ஷவென்றும் யாழில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.

இந்த நாட்டின் இராணுவத்தையும் சிங்கள மக்களையும் அழிக்க முயன்ற பிரபாகரனை மிஸ்டர் என எவ்வாறு அழைக்கலாம்?நாட்டுப்பற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் அதை எவ்வாறு தக்க வைக்க வேண்டும் என்பதிலும் மிகவும் அறிவுள்ளவர். இவரால் மட்டுமே சிங்கள மக்களையும் பௌத்த மதத்தையும் காப்பாற்ற முடியும்.

எதிரணியால் எதுவிதமான திட்டங்களையும் செய்ய திறன் அற்றவர்கள் என்ற காரணத்தினாலேயே விடுதலைப்புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டதாகவும் சிங்கள மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், வட பகுதியில் இராணுவம் கைப்பற்றியுள்ள இடங்கள் யாவும் அரச காணிகளே. இதை எப்படி அங்குள்ள பொதுமக்கள் காணி என்று கூற முடியும் என்ற கேள்வியையும் கோத்தபாய எழுப்பினார்.இராணுவத்திற்கு தேவையான காணிகளை பாதுகாப்பு கருதி விடுவிக்க முடியாது.

இராணுவத்தின் தேவைகளுக்கு மேல் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு கொடுக்க தற்போதைய அரசு கவனம் செலுத்தகிறது.பல உயிர்த் தியாகங்களை செய்து புலிகளை அழித்தோம். ஆகவே நாட்டின் பாதுகாப்பு, சிந்தனையுடன் நானும் எனது சகோதரரும் இராணுவமும் இப்பொழுது அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறொம்.

தற்போது நாட்டின் மீது அக்கறை இல்லாத சந்திரிக்கா, ரணில், சம்பிக்க ரணவக்க, முஸ்லிம் அடிப்படைவாதிகளான ரிசாத், அசாத்சாலி போன்றவர்களினால் பௌத்த சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது. சிங்கள மக்கள் புத்தி கூர்மையுடனும் செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்