Breaking News

இருதேசம், ஒரே நாடு! என்ற கொள்கையோடு எமது கட்சி பயணிக்கும் -த.தே.ம.முன்னணி

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். என தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
வருடாந்த தேசிய மாநாடு யாழ்.கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள்,தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இந்த மாநாட்டின் இறுதியில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு

 01. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம். 

02.தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பெரும் இன அழிப்புக்கு எதிராகச் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தக்கோரி, எமது செயற்கபாடுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெருமளவில் முன்னெடுத்தல். 

03. காணாமற்போனவர்கள், அரசியல் கைதிகள் என்பவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், நில அபகரிப்புக்கு எதிராகவும் பன்முகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.

 04. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியப் பேரவையை நிறுவி, தமிழ் மக்களை நிர்வகிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவோம்.

 05. போரினால் பாதிக்கப்பட்ட அவயவங்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடுவோம். 06. புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் வடக்கு கிழக்கில் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கு எமக்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்துச் செயற்படுவோம். என தெரிவிக்கப்பட்டது.

07. எமக்கான கல்விக் கொள்கை, விளையாட்டுக்கொள்கை, கலை,பண்பாட்டுக்கொள்கை, சுகாதாரக் கொள்கை என்பவற்றை உருவாக்கி முன்னெடுப்போம். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன.