Breaking News

உண்மை அம்பலமாகிறது.! நாராஹென்பிட்டி றகர் வீரர் மரணம் விபத்து அல்ல என உறுதி

நாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

கொழும்பில் இன்று  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"2012 மே 17ம் திகதி நாராஹென்பிட்டியில் இடம்பெற்ற றகர் வீரர் வசீம் தாஜூதீன் என்பவரின் மரணம் தொடர்பில் நாராஹென்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்தது. இதில் இரண்டு விஞ்ஞானபூர்வ சாட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியரின் அறிக்கை. இரண்டாவது இரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கை. 

இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் அரச இரசாயக பகுப்பாய்வு அதிகாரியின் கருத்து எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அது தொடர்பான அறிக்கை 2015 பெப்ரவரி 12ம் திகதியே கிடைத்தது. இரசாயன பகுப்பாய்வாளர் சம்பவம் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது என அறிவித்துள்ளார். ஆனால் மற்றைய அறிக்கையில் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

விசேடமாக உயிரிழந்த நபரின் உடலில் காபன் மொனொக்சைட் வாயு சேர்ந்திருப்பது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரியவருகிறது. அதனால் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்பது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதியாகிறது. 

அதனால் இந்த மரணம் குறித்து விசாரணையை நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து அகற்றி நேற்று தொடக்கம் குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். அதன்படி குற்றத் தடுப்புப் பிரிவினர் பூரண விசாரணை நடத்துவர்" என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.