புளியங்குளத்தில் விபத்து! சிறுமி உயிரிழப்பு ,மூவர் படுகாயம்
வவுனியா, புளியங்குளம், இராமர்புளியங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் தாயும் தந்தையும் ஓட்டோ சாரதியும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து புளியங்குளம் நோக்கிப் பயணித்த ஓட்டோவும் எதிரே வந்த பிக்கப் ரக வாகனமும் புளியங்குளம், இராமர்புளியங்குளம் பகுதியில் ஏ-9 வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது ஓட்டோவில் பயணித்த ஒன்றரை வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், சிறுமியின் தாயும், தந்தையும், ஓட்டோ சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். சிறுமியின் சடலமும் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர். பிக்கப் வாகனத்தைச் செலுத்திவந்தவர் மதுபோதையில் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.








