Breaking News

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு இலங்கை தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, இலங்கையில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கக் கூடும் என்று  தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பான சட்டரீதியான தடைகளை அகற்றும் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளும், இலங்கையில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.

தற்போதைய சட்டங்களின் படி, அவர்களை வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ள முடியாது. அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். 30 ஆண்டு போரினால், இடம்பெயர்ந்த சுமார் 1 இலட்சம் அகதிகள் தென்னிந்தியாவில் உள்ளனர்.

இவர்கள் இலங்கை குடியுரிமையைக் கொண்டுள்ள போதிலும், தமிழ்நாடு அரசாங்கத்தின் கவனிப்பில் உள்ளனர். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, அகதிகள் அங்கேயே தமது வாக்குகளைச் செலுத்தும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார்.