Breaking News

விலைபோகாத அரசியற் கட்டமைப்பே எமது மக்களுக்குத் தேவை! – விக்கினேஸ்வரன்

இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும்,
வினைத்திறன் மிக்கதும்,விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில்நேற்று இறுதி நாள் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

தமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். எங்களுடைய மக்கள் நிறையத் தேவைகளை உடையவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். உண்ண உணவில்லை, இருக்க இடமில்லை, தொழில் வாய்ப்பு இல்லை,அவர்கள் காணிகள் வெளியார் சுவீகரிப்பில் அகப்பட்டுள்ளன,

பிள்ளைகள் சிறையில் வாடுகின்றார்கள் அல்லது காணமற் போயுள்ளார்கள் என இன்னோரன்ன பிரச்சனைகள் பல அவர்கள் முன் தலைதூக்கி நிற்கின்றன. ஒரு காலத்திலே மிகச் சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இன்று ஏதிலிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.பல குடும்பங்கள் தமது குடும்பத் தலைவர்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த சிறார்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் எம்மிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களின் சோகக் கதைகள் எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன.இவர்களுக்கு உதவுவதற்கு நாமும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் தரும் பணம் மிகச் சொற்பமே. அவற்றைக் கூடுமானவரை இலஞ்ச ஊழல்கள் இன்றி மக்களிடம் போய்ச் சேர்ப்பிக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம்.

ஆனால் பழைய பழக்கங்கள் எங்கள் அலுவலர்கள் சிலரை விட்டுப் போவதாக இல்லை. வறியவர்களிடம் வலிந்தெடுக்கும் வக்கிர புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்திருக்கும் உங்களில் பலரும் எம் மக்களுக்கு உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதை நான் அறிவேன். எனினும் இவ்விடயங்களை ஒழுங்குபடுத்தி வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நிதிகளை உண்மையில் தேவையுள்ள எமது மக்களுக்கு முழுமையாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டபோது முந்திய அரசாங்கத்தினால் பல தடைகள் விதிக்கப்பட்டன.

இப்போது சற்று இணக்கமான சூழல் தென்படுகின்றது. ஆனாலும் முழுமையான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்பட்டு விடுமேயாயின் உங்கள் அனைவரிடமும் எமது தேவைகள் குறித்து விண்ணப்பிக்க எம்மால் முடியும்.நீங்களும் தாராள மனதுடன் உதவி புரியலாம். அண்மையில் இங்கிலாந்தில் தமிழ் சகோதர சகோதரிமார் என்னிடம் வெளிநாட்டுப் பணத்தை நீட்டினார்கள். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பணமானது சட்டப்படி வரவேண்டும் என்பது எனது விருப்பம்.

ஆகவே உங்கள் பணங்களை இலங்கையில் எவருனுக்கேனும் அனுப்புங்கள். அவர்களை இலங்கைப் பணம் மூலம் எமக்கு அனுப்பச் சொல்லுங்கள். நாங்கள் ஏற்று நீங்கள் விருப்பப்படும் செயற்பாடுகளை செவ்வனே செய்வோம் என்று கூறினேன். சிலர் அவ்வாறு செய்யத் தொடங்கி விட்டார்கள்.

இதை நான் இங்கு குறிப்பிடுவது உங்களிடமிருந்து நிதி உதவியை பெறுவதற்கான ஒரு முத்தாய்ப்புச் செய்தி என்று யாரும் தப்பாக எண்ணிவிடாதீர்கள். ஆனால் இந்த நொந்து போன சமூகத்தை ஏனைய பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஒப்பாக உயர்த்துவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்களும் வழிகாட்டல்களும் மிகமிக அவசியமானது.

ஆகவே எப்பவாவது ஒரு நாள் உங்கள் அனைவரதும் உதவியை நாடும் நாள் வரும். அதனை முன்கூட்டியே உங்களுக்குக் கூறிவைக்கின்றேன்!வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வடமாகாணத்தை ஆள்வதற்கென ஒரு தனியான அலகாக வடமாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் மாநகரசபையையும் நிர்வகிப்பதற்கு அவற்றிற்கென தனியான ஒவ்வொரு சபைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் நிர்வகிக்கக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் மிக விரைவில் நடைபெற இருக்கின்றன. தற்போது அவை வழக்கொழிந்து நிற்கின்றன.

இத் தேர்தல்களில் எமது பாரம்பரிய “நாட்டாண்மைமுறை” தெரிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேச சபை, நகர சபை அல்லது மாநகர சபை நிர்வாக முறைமையைக் கற்றுத் தேர்ந்தவர்களும் அல்லது கற்றுத் தேற முடிந்தவர்களும் மற்றும் நேர்மையாகச் செயற்படக் கூடியவர்களும், விலை போகாதவர்களும், ஊழல் இலஞ்சத்திற்கு இடமளியாதவர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் நலம் சார்ந்த, படித்த, தன்னலமற்ற சேவையை மக்களுக்குக் கொடுக்கக்கூடிய பிரதிநிதிகளையே நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கள் கட்சி என்பதால் அவர் எப்படிப்பட்டவர் என்றாலும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படப்படாது.

இன்று பிரதேசசபை நிர்வாகம் கூட மிகவும் சிக்கலானதொன்றாக மாறி வருகின்றது. கணனி ஞானம், கணக்கு ஞானம், சபையில் நடந்து கொள்ளும் விதம் பற்றிய ஞானம் போன்றவை பிரதேசசபைப் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும்.

ஆகவே பிரதேச சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். படியாத சிலர் அண்மைக் காலங்களில் “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,நாங்கள் எதையுஞ் செய்யலாம்” என்று படித்த, பண்புள்ள செயலாளர்களுக்குக் கூறி, அச்செயலாளர்கள்அப்பேர்ப்பட்டவரின் கோரிக்கைகளை மறுத்ததால் குறித்த நபர்கள் அடிதடியில் இறங்கவும் பின்னிற்கவில்லை. சட்டத்தில் இடமிருக்கின்றதா என்று பார்க்க அவர்களுக்கு அறிவு குறைவு.

எனவே “நான் சொன்னால் அவர் செய்ய வேண்டும்” என்று ஆணவத்துடன் கூறத் தலைப்பட்டு விட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் சில ஊழியர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களை உள்ளெடுக்க தற்போதிருக்கும் சட்டத்தில் இடமில்லை.

இதைக் கூறினால் அவர்களின் பதில் “சேர்! நீங்கள் எடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எடுக்கத்தான் வேண்டும்! நீங்கள் ஆணையிடுங்கள்” என்று கூறினார்கள். இதுதான் வடமாகாணசபை வரமுன் இருந்த சூழல். அதனை எங்களிடமும் எதிர் பார்க்கின்றார்கள் மக்கள். சட்ட திட்டங்கள், சுற்றறிக்கைகள், காரியாலயப் பழக்க வழக்கங்கள் எதையுமே ஏற்காமல் தான்தோன்றித்தனமாக நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால் எமது வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கூட இதே போலத்தான் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

சட்டத்திற்கு அமைவாக நடக்க வேண்டும் என்றால் முன்னர் எவ்வாறு செய்தார்கள் என்று கேள்வி கேட்கின்றார்கள். ஆகவே கல்வியறிவின் முக்கியத்துவத்தை இதிலிருந்து உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் கல்விகற்ற இக் கல்லூரித் தாயின் 125வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு இன்று பல்வேறு நாடுகளிலும் இருந்து எவ்வாறு பெருந் தொகைப் பணத்தை செலவளித்து இங்கே வந்திருக்கின்றீர்களோ அதேபோல் எதிர்வரும் தேர்தல்க் காலத்திலும் இங்கே வந்து உங்கள் உங்கள் பகுதிக்குரிய பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் முன்னின்று உழைக்க வேண்டும்.

படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் ஊழல் அற்றவர்களையும் தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும். அதுமட்டுமல்லாது நீங்கள் சார்ந்த கட்சிகளில் மிகச் சிறப்பானவர்களைப் போட்டியிட வைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.

எமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும்.வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலின் போது கோடி கோடியாகப் பணம் செலவழிக்கப்பட்டது. பணத்தைச் செலவழித்தவர்கள் எவ்வாறு தாம் செலவழித்ததை இனி ஈடு செய்ய முடியும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றார்கள்.

சிலர் பணம் தந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு விஸ்வாசமாய் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். பணம் செலவழித்து வாக்குகளை வாங்கும் அண்மைக்கால பழக்கங்களை நாங்கள் இனியாவது கைவிட வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் யாழ். இந்துக் கல்லூரியில் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு சிறு பகுதியை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்,

“நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கால முறைக்கு ஏற்றாற்போல் நம்மை நாமே அறிவுபூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் எமது முகவரியை இழக்காமல் எமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறினார் – “நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கின்றோம். பணி செய்து கொண்டிருக்கின்றோம். இவைகளைச் செய்யும் போது நமது வாழ்வில் ஒரு இலட்சியம் உருவாகும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும்பெரும் இலட்சியங்கள் தோன்றும். இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணங்கள் தோன்றும். எண்ணங்கள் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்” எனத் தொடர்ந்து கூறிக் கொண்டு சென்றார்.

மேலே குறிப்பிடப்பட்ட வரிகள் அனைத்தும் எமக்கெனக் குறிப்பிடப்பட்ட வரிகள் போலத் தோன்றுகின்றன. இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும்,விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும்.

அவ்வாறான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமாகவே எமது பணிகளை விரைவு படுத்தி எம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை ஓர் உயர் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.

என்னைப் பலரும் ஒரு “எதிர்ப்பு அரசியல் வாதி” என வர்ணிப்பதை நான் அறிவேன். நான் ஒரு அரசியல்வாதியும் இல்லை. கட்சி சார்ந்தவனும் இல்லை. நீதித்துறையில் எனது காலத்தைக் கழித்த பின்னர் சிவனே என்று ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும் மூழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள்.

தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். மக்களும் தங்கள் வாக்குகளைப் பெருவாரியாக எனக்கு அளித்து அமோக வெற்றியடையச் செய்தார்கள். அதனால் என் நிலை மாறியது.

நான் கொழும்பிலே பிறந்து, கொழும்பிலே கல்வி கற்று, அங்கேயே சீவித்தவன். சுமார் 10 வருடங்கள் வடகிழக்கு மாகாணங்களில் நீதித்துறையில் இருந்து கடமையாற்றியவன். ஆனால் சிறுவயது முதல் எனக்கு தமிழ் மீது பற்று, தமிழர்கள் மீதும் பற்று.

அத்துடன் வடமாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் எனப் பிரித்து நோக்காது அனைத்து தமிழர்களும் இந்த இலங்கைத் திருநாட்டில் சிங்கள மக்களுடன் சம அந்தஸ்துடைய இனமாக வாழ வேண்டுமென்பதில் குறியாக இருந்தவன்.

எனினும் இங்கு வந்த பின்னர் தினமும் என்னைச் சந்திக்க வருகின்ற மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி, அவர்களுடைய கஸ்டங்கள் பற்றி, அவர்களுடைய தேவைகள் பற்றி, அவர்கள் பறிகொடுத்த வசதிகள் பற்றி, அவர்கள் வாழ்வில் இழந்தவை பற்றித் தமது சோகக் கதைகளை எனக்கு எடுத்துக் கூறக் கூற என்னுள் ஒரு வைராக்கியம் பிறந்தது.

இந்த மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எந்த மட்டத்திலாவது சென்று பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. அதற்காக நான் எவ்வாறான எதிர்ப்பை அல்லது பழிச்சொல்லை ஏற்க நேர்ந்தாலும். நான் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை.

சில கட்சிகளில் ஒருவர், இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள்.

ஆகையால்த்தான் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நீங்களும் இதுபற்றி நன்றாகச் சிந்தியுங்கள். எது நல்லது என நம்புகின்றீர்களோ அதனை வலுப்பெறச் செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்!

அவ்வாறான செயல்களுக்கான அத்திவாரங்கள் இப்போதிருந்தே இடப்பட்டு திட்டமிட்ட முறையில் மிகச் சிறப்பான சபைகளை எதிர்வரும் தேர்தல்களில் உருவாக்குவோம். எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

முன்னைய பதிவுகள்  



முதல்வரின் புறக்கணிப்பு ஏன் -அவருடனான நேர்காணல்( காணொளி இணைப்பு)

யாருக்காகவும் மேடை ஏறமாட்டார் முதலமைச்சர்!(அறிக்கை இணைப்பு) 

அமெரிக்கா அடக்கி வாசிக்க சொன்னதா? முற்றிலும் பொய்-விக்கி(இலண்டன் உரை -காணொளி)

நாம் தனி இராட்சியமாக இருந்தவர்கள் விக்கினேஸ்வரன் (காணொளி இணைப்பு) 

தமிழர்களுக்கு ஒன்றையும் சிங்களவர்களுக்கு ஒன்றையும் கூறுவது மடமை(காணொளி)