Breaking News

சந்திரிக்கா மீது சேறுபூச பெருந்தொகையை செலவிட்டார் மஹிந்த



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்காக மஹிந்த தரப்பு பாரியளவிலான நிதியினை செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதே மஹிந்த தரப்பு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போதே சுயாதீன தொலைக்காட்சியின் உள்ளகக் கணக்காளர் அலகியவன்ன இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பிடப்படுகின்றது.

இதுதொடர்பில் சாட்சியமளித்துள்ள சுயாதீன தொலைக்காட்சியின் உள்ளகக் கணக்காளர் அலகியவன்ன, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி – சந்திரிக்கா தரப்புக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சந்திரிக்காவின் உரையிலிருந்து மிஸ்டர் பிரபாகரன் என்ற வார்த்தைகள் அடிக்கடி தொலைக்காட்சி விளம்பரங்களாக ஒளிபரப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்திரிக்காவுக்கு எதிரான குறித்த விளம்பரங்களுக்காக மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.