Breaking News

ஒபாமாவின் செய்தியுடன் நிஷா பிஸ்வால் வரவில்லை – அமெரிக்கத் தூதரகம்

இலங்கை அரசாங்கத்துக்கான அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன், இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், கொழும்பு வந்திருப்பதாக வெளியான செய்திகளை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் நேற்றுமுன்தினம் அதிகாலை கொழும்பு வந்திருந்தார்.

அவரது திடீர் கொழும்பு பயணம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் முற்றிலும் தனிப்பட்ட பயணமாகவே இலங்கை வந்திருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன் அவர் வந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தவிருப்பதாகவும் வெளியான செய்திகளையும் அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அடுத்தடுத்த கொழும்புக்கு மேற்கொண்ட பயணங்கள், தொடர்பாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே நிஷா பிஸ்வால் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.