Breaking News

எந்தக் கூட்டணியாலும் சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் டிலான்

எந்தவொரு புதிய அரசியல் கூட்டணியினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த இயலாது. அவ்வாறு பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு அது கனவாகவே அமையும் என இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் உரிய முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் ஒருமித்த செயற்பாடுகளுடன் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் உரியவாறு முன்னெடுக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றினைந்த எதிர்க்கட்சியினை சேர்ந்த சில அரசியல் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற கட்சியொன்றை ஸ்தாபிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற தொடர்பில் வினவிய போதே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக பேச்சாளரும் இராஜங்க அமைச்சருமாகிய டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் டிலான் பெரெரா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

ஒரு சில கருத்து முரண்பாடுகளின் அடிப்படையில் வெறுமனே உருவாக்கப்படும் எந்தவொரு புதிய அரசியல் கூட்டணியினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை பிளவுப்படுத்த முடியாது. எமது கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் உட்பட மத்தியகுழுவின் செயற்பாடுகளுடன் ஒருமித்தே கட்சியின் பிரதிநிதிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளனர். அவ்வாறே இன்றும் செயற்படுகின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அல்லது முன்னெடுக்காமையும் ஏனைய கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளினதும் தனிப்பட்ட தீர்மானமாகும். ஆனால் எமது கட்சியுடன் இணைந்து செயற்படுபவர்கள் எமது கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு தலைசாய்க்க வேண்டியது அவசியமாகும்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக முன்னாள் ஜனாதிபதியும் எமது கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி குறித்து தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் பொய் பிரச்சாரங்களேயாகும். காரணம் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக்கட்சியை தோற்கடிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சிக்கு ஆதரவாக தேர்தலில் களமிறங்குவதாக தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் ஒரு சில டீல் காரர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினை பிளவுபடுத்தும் முகமாக போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை முடிவடைந்துள்ள நிலையில் மேலும் சில வற்றுக்கான ஆயுட்காலம் அதிகரிப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்த தேர்தல்களின் போது ஜனாதிபதியினால் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் மூவின மக்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை உள்வாங்கி புதிய முறையிலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியள்ளது. அந்தவகையில் இதற்கு காலம் தேவைப்படுகின்றது.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலானது வாக்குறுதியின் பிரகாரம் புதிய முறையில் உரியவாறு இடம் பெறும். தேசிய அரசாங்கத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது கட்சியின் முன்னாள் தலைவர்களின் ஒருமித்த ஆதரவுடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும். மறுபுறம் இனிவரும் காலங்களில் இனவாத கட்சிகளுக்கோ அல்லது இனவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்காது இவ்விடயத்தில் நாம் உறுதியாவே உள்ளோம் என்றார்.