Breaking News

சனல் 4 செவ்வியை மறுக்கிறார் ரணில்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சி செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,

“ அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை அரசாங்கம் அனுமதிக்காது. நாம் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்றும், உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வர் என்றும் கூறியிருந்தார். இந்த விடயத்தில் நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தில் உள்ள ஏனையவர்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.

அதேவேளை விசாரணைகளுக்கு டெஸ்மன்ட் டி சில்வா போன்ற நிபுணர்களின் உதவி கோரப்படும். இதுபற்றி புதன்கிழமை நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துரையாடியுள்ளோம்” என்றும் அவர் நேற்று தெரிவித்தார். அத்துடன் ஊடகங்களையும் அவர் கடுமையாக சாடினார்.