யாழில் ஜனாதிபதியை கொலை செய்ய சதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய நத்தார் தினநிகழ்விற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தபோது அவரைப் படுகொலை செய்ய சதி முயற்சிகள் நடந்திருந்ததாக அம்பலப்படுத்தியுள்ள ஜக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி வருவதாயின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரவேண்டும் என தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் நேற்று (05) நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய துவாரகேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவாளர்களான படை அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இலங்கை இராணுவ உளவுப்பிரிவுடன் இணைந்து செயற்படும் இருவர் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.
இக்குழுவினர் ஏற்கனவே முன்னணி ஊடகவியலாளர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் போன்றவர்களைக் கொலை செய்ய புலனாய்வுத்தரப்புக்களுடன் இணைந்து முன்னரும் செயற்பட்டிருப்பதாகவும் தற்போதும் முற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக அண்மையில் வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தைக் கொலை செய்ய இக்கும்பல் முற்பட்டிருந்ததாகவும் அவரது வாகனம் பின்தொடரப்பட்டிருந்ததாகவும் அவ்வாகனத்தை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த நபரே பின்தொடர்ந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவை தலைவரினை தான் எச்சரித்திருப்பதாக தெரிவித்த அவர் யாழில் போதை பொருள் கடத்தல்களுடன் இக்கும்பலிற்கும் தொடர்புகள் இருப்பதாகவும் அதனை அம்பலப்படுத்தியவகையில் தன்மீது சேறுபூசவும் தனது குடும்பத்தை காவு கொள்ளவும் முற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தனது மனைவி பெயரில் போலி முகநூல்களை உருவாக்கி பாலியல் தொழில் முகவராக தனது தொலைபேசி இலக்கத்தை பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வகையில் தனது தொலைபேசி இலக்கத்திற்கு பாலியல் தேவைக்கென ஆயிரக்கணக்கில் அழைப்புக்கள் விடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முதல் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் வரை நள்ளிரவில் தொலைபேசி அழைப்பினை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.








