காணிகளை விடுவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கும் அனைத்து காணிகளையும் விடுவிக்க வலியுறுத்தி 32 நலன்புரி முகாம்களை சேர்ந்த மக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நலன்புரி நிலையங்களின் தலைமை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.
செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த போது, ஆறு மாத காலத்திற்குள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள அனைத்து மக்களுடைய பிரச்சனைகளும் தீர்க்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் அரசாங்கத் தரப்பிலிருந்து எமது பிரச்சினைகள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் எமது நம்பிக்கையை சீர்குலைத்துள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு செயலளர் தெரிவித்த கருத்துக்கள் எமக்கு ஜனாதிபதியின் கருத்தின்மீது இருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்நிலையில் தான் நாங்கள் அகிம்சை வழி போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இத் தீர்மானமானது 32 நலன்புரி நிலையங்களையும் ஒன்றிணைத்து மேற்கொள்வதாகவே அமைந்துள்ளது. எமது அகிம்சை வழியான போராட்டம் எவருக்கும் அசௌகரியத்தைக் கொடுக்காது இருந்த இடத்திலிருந்தே உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளோம்.
அதற்கமைய உண்ணாவிரதப் போராட்டம் எதிர் வரும் 4 ஆம்திகதி வெள்ளிக்கிழமை கண்ணகி நலன்புரி முகாமில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு நலன்புரி முகாமில் உண்ணாவிரப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை எமது காணிகளில் மேற்கொள்ளவுள்ள விமானநிலைய விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்புகளில் இந்தியாவின் தலையீடே அதிகமாகவுள்ளதை நாம் உணர்கின்றோம்.
எனவே நலன்புரி முகாமில் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வரும் எமது வாழ்வியல் விடயத்தில் இந்தியா சிந்தித்து செயற்பட வேண்டும். குறிப்பாக 26 வருடகால எமது பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசிலிருந்து மாகாண அரசு வரை பேசுகின்றார்கள். இவ்வாறு இருக்கையில் மக்களுடைய கருத்துக்களுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கின்ற ஜனநாயக நாடான இந்தியா எமது நிலங்களை ஆக்கிரமித்து எமது நிலங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகளில் முதலிடு செய்வதென்பது ஏற்கத்தக்க செயலல்ல.
மேலும் சர்வதேசமானது எங்களுக்கு தெளிவான ஒரு தீர்வை தருமென நாங்கள் நம்பியிருந்தோம். சர்வதேச தலைவர்கள் ஒவ்வொருவரும் இங்கு வரும் போது நீங்கள் உங்கள் இடங்களுக்கு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகின்றோம். அது தொடர்பாக நாம் இலங்கை அரசாங்கத் தலைவர்களோடு பேசி வருகின்றோம் என தெரிவத்தனர். இருந்த போதிலும் யாராலும் எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க முடியவில்லை.
எனவே சர்வதேசம் என்ன சொன்னாலும் யார் வந்து போனாலும் நாம் எமது ஜனாதிபதியையே நம்புகின்றோம். அவருக்கு தான் எம்மை சொந்த இடத்தில் குடியமர்த்துவதற்கும் எமது காணிகளை மீளக்கையளிப்பதற்கும் உரிமையுண்டு. எனவே அவர் கூறியது போல ஆறு மாதங்களுக்கு எமக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியோடு இணைந்து நாம் விழிப்பாக இருக்கின்றோம் என்பதை புலப்படுத்தவே நாம் இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
எமது போராட்டமானது எந்தவித கட்சி சார்புமற்ற போராட்டமானதாகும். எனவே போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலைகழக மாணவர்கள், பொது மக்கள் என பலதரப்பினரும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் எம்மால் மேற்கொள்ளப்படும் உண்ணாவிர போராட்டத்திற்கு சரியான பதில் கிடைக்கப்பெறாவிட்டால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நிலப்பகுதியாலும் நீர்பகுதியாலும் வெள்ளைக்கொடியோடு ஊடுருவுவோம் எனத் தெரிவித்தனர்.