மன்னார் தள்ளாடி இராணுவ முகாம் எதற்கு?
'மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் மன்னார் கூட்டுறவுத் திணைக்களத்தின் கட்டடத்தில் இராணுவம் இன்னுமிருக்கிறது. அந்த முகாம் எதற்கு, அதனை எப்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்?' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிமலநாதன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். மன்னார் கூட்டுறவுத் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்தில் இராணுவம் தங்கியுள்ளது. தற்போது மரக்கறிகளையும் விற்பனை செய்கிறது. அவ்விடத்திலிருந்து இராணுவம் எப்போது அகற்றப்படும். தள்ளாடி முகாமுக்கு 2 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த முகாம் இருக்கிறது. இது எதற்கு என்று வினவினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், இராணுவத்துக்கு தேவையான மாற்றுக் காணி கிடைத்தவுடன் மன்னார் கூட்டுறவு திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்திலுள்ள இராணுவம் அகற்றப்படும் என்பதுடன் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என்றார்.








