Breaking News

கைதிகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் மனித சங்கிலிப் போராட்டம்

சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி சென்.திரேசா ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பிள்ளையார் ஆலயம் வரை சென்றது. தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.