Breaking News

விக்கிக்கு ஜெயலலிதா பதில் கடிதம் - விரைவில் சந்திக்கவும் ஏற்பாடு

இலங்கைத் தமிழர் நலன் காக்கவும்
அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கும் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்தாண்டுகளில் முன்னெடுத்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து, அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே தமிழக முதல்வர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றமைக்காக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அனுப்பியிருந்த வாழ்த்துக் கடிதத்திற்கு, ஜெயலலிதா ஜெயராம் நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் மக்களின் நலன் கருதி இந்திய அரசாங்கத்தின் ஊடாக தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் தமிழக முதல்வர் தமது பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வட மாகாண முதல்வரும் தாமும் தமக்கு வசதியான ஒரு தினத்தில் சந்திக்க முடியும் என்றும் தமிழக முதல்வரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழக அரசை வெட்டியோடி மத்திய அரசுடன் உறவை பேணிய கூட்டமைப்பு தலைமைகளிடம் மிகவும் கோபமாக இருந்த ஜெயலலிதா வடமாகாண முதல்வரின் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டு அவரை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்ததன் ஊடாக ஈழத்தமிழர்-தமிழ்நாட்டு அரசியல் உறவில் ஒரு திருப்பத்தை தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜெயலலிதா ஜெயராம் எடுத்திருந்த நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய செய்தி


ஜெயலலிதா அவர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்து வடக்கு முதல்வர் ஆற்றிய உரை