நாடகக்குழுவின் நாடகம் வடக்கில் நிறைவு பெற்று கிழக்கில் ஆரம்பமாம்
காணாமல் போனோர் தொடர்பாக சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் வட மாகாணத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இனிமேல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு சாட்சிகள் பதிவு செய்யப்பட மாட்டது என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் வட மாகாணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இம் மாதம் 30ம் திகதி முதல் ஜூன் 4ம் திகதி வரை மட்டக்களப்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை 3200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாழைச்சேனை மற்றும் களஞவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் குறித்த தினத்தில் வாய் மொழி மூலம் சாட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கிழக்கின் ஏனைய மாவட்டங்களான அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகியவற்றிலும் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி குறித்த சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை முடிந்ததும் ஆணைக்குழு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரியவந்துள்ளது.








