Breaking News

மஹிந்தவுக்கு பாதுகாப்பு கேட்ட எம்மீது தாக்குதல் நடத்தினர்- கூட்டு எதிர்கட்சி

அரசாங்கத்தினால் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றம் பிரிவினை வாதிகளின்கூடாரமாகியுள்ளது.

எனவேபிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டையும் மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாக்க பொது மக்கள் அணிதிரள வேண்டும் என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கோரிய எம்மை ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தாக்கினார்கள். இந்த சம்பவம் சர்வதேசத்தில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன பதில் கூற போகின்றார் எனவும் கூட்டு எதிர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது .

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிகக்கப்பட்டது .

கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில்

பாராளுமன்றத்திற்கு நாங்கள் சண்டை போட செல்லவில்லை . முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விடுதலைப் புலிகளினால் காணப்படும் உயிர் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி அவரது பாதுகாப்பை குறைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் மிகவும் ஜனநாயக ரீதியில் கோரினோம்.ஆனால் மிகவும் திட்டமிட்ட முறையில் எமக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் விளக்கம் காணப்பட வில்லை. இந் நிலையில் திட்ட மிட்ட முறையில் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கி மஹிந்த ராஜபக்சவை சாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .அமைச்சர் சரத் பொன்சேகா இயல்பாக பேசவில்லை. அவர் எழுதி வைத்தே பேசினார். இதிலிருந்து இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டமைவெ ளிப்படுகின்றது.

பாராளுமன்ற விதிமுறைகளை மீறி பாராளுமன்றத்தில் செயற்பட்டு சபாநாயகர் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில்

பாராளுமன்றம் பிரிவினைவாத்தின் கூடாரமாகி விட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைத்து அவரின் உயிருக்கு தீங்கை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் கருத்து கூறுகையில் இதனை தடுத்து நிறுத்தி ஆளும் கட்சியின் பிரதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் எம்மை தாக்கினார்கள்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

பந்துல குணவர்தன குறிப்பிடுகையில்

விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை பழிவாங்க தீவிரமாக செயற்படுகின்றனர். இதனை பொருட்படுத்தாது அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை குறைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர் இன்று வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். வெளியில் பாதுகாப்பாக சென்று அரசியல் நடவடிக்கைகளில் செயற்பட முடியவில்லை. இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் ஆளும் கட்சி எம்மை தாக்குகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதில் என்ன என்பது அறியப்பட வேண்டும் . நல்லாட்சிக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.