நாடாளுமன்ற மோதல் : சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
நாடாளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்க ளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான அறிக்கை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையில், சபாநாயகரால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினர், இன்று (புதன்கிழமை) நண்பகல் 12.30 மணியளவில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், இன்று பிற்பகல் கூடும் நாடாளுமன்ற அமர்வில், சபாநாயகர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களால் வாக்குவாதம் முற்றி, இறுதியில் கைகலப்பில் முடிந்தது. இத் தாக்குதல் சம்பவத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








