Breaking News

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜெனிவா அமர்வில் இலங்கை விவகாரம்!

ஜெனிவாவில் நடைபெறவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 109ஆவது அமர்வில் அமர்வில்,இலங்கை தொடர்பாக கலந்துரை யாடப்படவுள்ளது.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 109ஆவது அமர்வு, எதிர்வரும் மே 9ஆம் திகதி தொடக்கம், 18ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில், 40 நாடுகளில் இடம்பெற்ற 800 சம்பவங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இதன் போது, காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களையும், பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் ஐந்து சுதந்திர மனித உரிமை நிபுணர்கள் சந்திக்கவுள்ளனர்.

அத்துடன் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும், இந்தக் குற்றங்கள் இடம்பெற்ற சூழ்நிலைகள் குறித்தும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும். காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக ஆராயும், எதிர்கால பயணங்கள் குறித்தும் இந்த அமர்வில் கலந்துரையாடப்படுவதுடன், ஆண்டறிக்கையும் நிறைவேற்றப்படும்.

இலங்கை மற்றும் துருக்கிக்கு பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் நிபுணர்கள் மேற்கொண்ட பயணங்கள் தொடர்பாகவும், இந்த அமர்வில் விவாதிக்கப்படும்.

இந்த அமர்வு தனிப்பட்ட அமர்வாகவே நடைபெறும் என்றும், அமர்வின் முடிவில், மே18 ஆம் திகதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.