Breaking News

சுனாமி எச்சரிக்கை உடன் விமான சேவைகள் ரத்து



பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று(31) கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயலின் எதிரொலியாக அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அந்த மாகாணம் முழுவதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள புகுஷிமா அணு மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தியும் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக, தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள கிழக்கு ஜப்பான் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

ஜப்பானின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டோயோட்டா, இந்த புயல் கடந்துவரும் வழியில் உள்ள தனது இரண்டு உற்பத்தி அலகுகளில் இன்றைய உற்பத்தியை நிறுத்திவைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி தாக்கிய பகுதிகளை இந்த ‘லயன்ராக்’ புயல் இன்று மணிக்கு சுமார் 170 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையினர் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.