மெனிக் பாம் முகாம், வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற சித்திரவதைகள்
கொடூரங்களும் பாதுகாப்புத் தரப்பினரால் அரங்கேற்றப்பட்டமை ஒன்றும் இரகசியம் அல்ல. அதன் பிரதிபலன் இன்றும் இலங்கையை சர்வதேசத்தின் முன் மனித உரிமை விவகாரத்தில் தலை குனிந்து நிற்கும் நிலைமையை ஏற்படுத்தியது என்றால் அதனை மறுக்க முடியாது. அதே போன்றே இந்த மனித உரிமை மீறல் விவகாரங்களில் இராணுவத்துக்கு அல்லது முப்படைகளுக்கு எந்தளவு தூரம் தொடர்பிருக்கின்றதோ அதற்கு நிகரான தொடர்பு அல்லது பங்களிப்பு பொலிஸாருக்கும் உள்ளது. அதற்காக திரட்டப்பட்டுள்ள ஆதாரங்கள் ஏராளம்.
குறிப்பாக விசாரணை எனும் பெயரில் பொலிஸார் அரங்கேற்றிய பாலியல், உடல் மன ரீதியிலான சித்திரவதைகள் விபரிக்க முடியாதவை. இந்த சித்திரவதைகள் குறித்து பிரதானமாக குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் திணைக்களத்தின் இரு முக்கிய பிரிவுகள் மீதே குவிந்துள்ளன. அதாவது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன மீதே இவ்வாறான மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளன.
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற போது பொலிஸாரின் சித்திரவதைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தன. இதன் போது தற்போதைய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியான ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் வசமாக சிக்கிக்கொண்டதுடன் அவரால், ஐ. நா. நிபுணர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதை அவதானித்த போது, இறுதிப்போரின் போதான கொடூரங்கள் அவரது மனச்சாட்சியை உறுத்துகிறதா என எண்ணத் தோன்றியது.
எனினும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த செவ்வாயன்று எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு உடனடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மாற்றமாக கூட்டம் நிறைவடைந்து 48 மணி நேரத்துக்குள் சுருக்கமான எழுத்து மூல பதில்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனினும் அந்த பதில்களில் எந்தளவு தூரம் ஐ. நா. சித்திரவதைகளுக்கு எதிரான நிபுணர்கள் எழுப்பிய கேள்விகளுக்காக போதுமான திருப்திகரமான பதில்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியே.
இந்த சித்திரவதைகளுக்கு எதிரான அமர்வில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
இந் நிலையில் ஜயந்த ஜயசூரியவின் பங்கேற்புக்கோ அல்லது அஜித் ரோஹணவின் பங்கேற்புக்கோ எவ்வித எதிர்ப்புகளும் எந்த தரப்பில் இருந்தும் வெளியிடப்பட்டிருக்காத நிலையில் புலனாய்வுப் பிரதானி சிசிர மெண்டிஸ் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா. அமர்வில் பங்கேற்றமையை அந்த அமர்வின் பிரதிநிதிகளும் ஊடக அமைப்புக்கள் பலவும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் வன்மையாக கண்டித்துள்ளன. அதற்கு காரணம் உள்ளது.
அதாவது இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொலிஸ் தரப்பில் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர் சிசிர மெண்டிஸ் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஏனெனில் அவர் அப்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரத்தில் இருந்ததுடன் சித்திரவதைகளின் மையமாக விளங்கிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு பொறுப்பாக அவரே செயற்பட்டார். இதுவே அனைவரது எதிர்ப்புக்கும் காரணமாகும்.
குறிப்பாக இலங்கையின் யுத்தகாலத்தில் இரகசிய முகாம்கள் பேணப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பிய சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் நிலைமை எந்த மட்டத்தில் உள்ளது என்றும் வினவினர்.
மேலும் பல்வேறு சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன எனவும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினர். இரகசிய முகாம்கள் யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்ததாக எமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. அவ்வாறு இரகசிய முகாம்கள் இலங்கையில் இருந்திருப்பின் அது எவ்வாறு நடந்தது என்று விளக்க முடியுமா? எனவும் ஐ.நா. பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளனவா? அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிடுமாறு நாம் அரசாங்கத்தை கோரி வருகின்றோம். எனினும் இது தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கமுடியுமா எனவும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் வினவினர்.
அதுமட்டுமன்றி கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டில் வெள்ளைவேன் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கையானது யுத்தகாலத்தில் அரச படையினர் பாலியல் வல்லுறவு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் ஐ.நா. பிரதிநிதிகள் குழு வினவியது.
அத்துடன் பொலிஸ் தடுப்பின்போது சந்தேக நபர்கள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதா? இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் எவ்வாறு உள்ளன எனவும் இந்த சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் எமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளவகையில் தற்போது இடம்பெயர்ந்த நிலையில் மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கையானோரே மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரிகின்றது. இது தொடர்பான நிலைமையை விளக்க முடியுமா? என்றும் தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது. அந்த பிரேரணையின் பிரகாரம் பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. அந்தப் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது. அந்தப் பொறிமுறையை எப்போது முடிப்பீர்கள் என்று கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் தன்மை குறித்தும் காணாமல் போனார் தொடர்பில் ஆராயவுள்ள நிரந்தர அலுவலகத்தின் நிலைமை குறித்தும் விளக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இது இவ்வாறிருக்க திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் விசாரணை எவ்வாறு உள்ளது. இந்த சம்பவங்கள் நடைபெற்று 10 வருடங்கள் கடந்துவிட்டன. ஏன் தாமதமான நிலைமை காணப்படுகின்றது என்றும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினர். அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் செயற்பாடு எந்த மட்டத்தில் உள்ளது என்றும் கேள்விகள் சரமாரியாக சட்டமா அதிபர் உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகளிடம் எழுப்பப்பட்டன.
எனினும் குறிப்பாக புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மெண்டிசை நோக்கி பல கேள்விகள் நேரடியாக சித்திரவதைக்கு எதிரான ஐ. நா. குழு தொடுத்திருந்தது. அந்த கேள்விகள் குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட சித்திரவதைகள் தொடர்பிலாகும்.
இந்த கேள்விகளானது, ஆர்.எஸ்.எப். எனும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஜே.டி.எஸ். எனும் இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஐ.ரி.ஜே.பி. எனப்படும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச மையம் உள்ளிட்ட அமைப்புக்களால் சித்திரவதைக்கு எதிரான ஐ. நா. குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே தொடுக்கப்பட்டுள்ளன. இக்கேள்விகளானது குறிப்பாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா. மையத்தின் உறுப்பினரான பெலீஸ் கெயாரினால் தொடுக்கப்பட்டிருந்தது.
2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஜூன் வரை குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் பிரதானியாக சிசிர மெண்டிஸ் கடமையாற்றியிருந்தமையை அடிப்படையாகக் கொண்டே இந்த கேள்விகள் அவரை நோக்கி தொடுக்கப்பட்டிருந்தன. மேற்குறிப்பிட்ட இரு பொலிஸ் பிரிவுகளின் பிரதானியாக சிசிர மெண்டிஸ் கடமையாற்றிய போது வவுனியா மெனிக் பாம் முகாம் மற்றும் வவுனியா வைத்தியசாலை ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் போது அதனை அறிந்திருந்தாரா என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டது.
பெலீஸ் கெயர், சிசிர மெண்டிஸிடம் கேள்விக்கணைகளை தொடுக்கும் போது பிரதானமாக ஒரு விடயத்தை மையப்படுத்தியிருந்தார். அதாவது, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகள் குழு முன்னெடுத்த விசாரணையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன பாலியல் சித்திரவதைகள் உட்பட பல சித்திரவதைகளை புரிந்தமை உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் நீர் மெனிக் பாம் முகாமுக்கு நேரடியாக சென்றிருந்தீரா என்று ஒரு கட்டத்தில் பெலீஸ் கெயார் நேரடியாக சிசிர மெண்டிஸிடம் வினவ அவர் ஆடிப்போனார். எனினும் இறுதிவரை சிசிர மெண்டிஸ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதில்களையும் அளித்திருக்கவில்லை.
இதனைவிட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம், எழுத்தாளர் வீ. ஜசிகரன் மற்றும் அவரது மனைவி வீ. வளர்மதி,
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதி நிதிகள் குழு முன்னெடுத்த விசாரணையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன பாலியல் சித்திரவதைகள் உட்பட பல சித்திரவதைகளை புரிந்தமை உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் நீர் மெனிக் பாம் முகாமுக்கு நேரடியாக சென்றிருந்தீரா என்று ஒரு கட்டத்தில் பெலீஸ் கெயார் நேரடியாக சிசிர மெண்டிஸிடம் வினவ அவர் ஆடிப்போனார். எனினும் இறுதி வரை சிசிர மெண்டிஸ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதில்களையும் அளித்திருக்கவில்லை.
ஊடகவியலாளர் கே. விஜேசிங்க ஆகியோர் பயங்கரவாத புலனாய்வாளர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தும் கேள்விகள் தொடுக்கப்பட்டன.
இதனைவிட தமிழ் வைத்தியர்கள் நால்வர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட வைத்தியர் துரைராஜா வரதராஜா உள்ளிட்டோர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூரங்களை வெளிக்கொண்டு வந்தமைக்காக சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்ததாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா. குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அத்தனை சித்திரவதைகள், கொடூரங்களை அரங்கேற்றியவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கை தான் என்ன என ஆராய்ந்தால் அதன் பெறுபேறு பூஜ்ஜியமாகும். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் குற்றப் புலனாய்வுப் பிரிவும் முன்னெடுத்த சித்திரவதைகள் பாலியல் கொடுமைகள் உட்பட மனித உரிமைகள் மீறல் விடயத்துக்கு அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போதைய தேசிய உளவுப்பிரிவின் பிரதானியுமான சிசிர மெண்டிஸ் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும்.
பொறுப்புக் கூறும் கடப்பாட்டுக்கு அமைவாக சிசிர மெண்டிசின் விவகாரத்தை இனிமேலாவது இலங்கை அரசாங்கம் ஆராய வேண்டும். மாற்றமாக பொறுப்புக் கூறும் கடப்பாட்டை அளவீடு செய்யும் இவ்வாறான சர்வதேச அமர்வுகளில் குற்றம் இழைத்ததாக கூறப்படுவோரையே அனுப்பி அவ்வமர்வுகளின் நடவடிக்கையை அவமதித்துவிடக் கூடாது.
– எம். எப். எம். பஸீர் –
முன்னைய கட்டுரைகள்
– எம். எப். எம். பஸீர் –
முன்னைய கட்டுரைகள்








