Breaking News

களைகள் எல்லாம் தாங்கள்தான் பயிர்கள் என்கின்றன – அமைச்சர் ஐங்கரநேசன்

அரசியல் ரீதியாக தமிழர்களை வழிநடத்துவதற்கு சரியான தலைமைத்துவம் இல்லை. அந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் களைகள் எல்லாம் தாங்கள்தான் பயிர்கள் என்று சொல்லி எழுந்து நின்று ஆடிக்கொண்டிருக்கின்றன என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


நேற்று (18-11-2016) ஊற்றுப்புலத்தில் நெல் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

“களைகள் என்று சொல்லப்படுவது தனியே பயிரோடு சேர்ந்தது மாத்திரமல்ல. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கூடாக களைகளை நீங்கள் நீக்க நாங்கள் எவ்வாறு இயந்திரம்  உங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறோமோ அதேபோல் உங்களுக்கும், அரசியல் உட்பட சமூகத்தில் பல களைகள் உள்ளன. அந்தக் களைகளை அடையாளம் காணவேண்டிய பொறுப்பும் அவற்றை அப்புறப்படுத்தவேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது.

அனுபவம்வாய்ந்த விவசாயிகளாகிய உங்களுக்கும் களை எது  பயிர் எது என்று அடையாளம் தெரியும். ஆனால் இன்று எங்களுக்கு மேய்ப்பர்கள் இல்லை. அரசியல் ரீதியாக தமிழர்களை வழிநடத்துவதற்கு எங்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை. அந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் களைகள் எல்லாம் தாங்கள்தான் பயிர்கள் என்று சொல்லி எழுந்து நின்று ஆடிக்கொண்டிருக்கின்றன. 

இது தொடர்பான  உங்களுடைய அவதானங்கள் விழிப்புணர்வுகள் இல்லாமல் விவசாயிகள் தனியே விவசாயம்தான் என்று  இருந்தால்  களைகள் எங்கள் பயிர்ச்சூழலை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துமோ அழிவை ஏற்படுத்துமோ அதேபோல் அரசியலில் முளைத்துள்ள களைகள் ஒட்டுமொத்தமான தமிழினத்துக்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு எமக்கு சரியான தலைவர்கள் இல்லாத சூழ்நிலையே காணப்படுகிறது. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் நாங்கள்தான் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் கூட தமிழ்ச் சமூகத்தை வழிநடத்துவதற்கு சரியான தலைமைத்துவம் இல்லையென்பது தங்கள் எல்லோருக்கும் தெரியும். 

அவ்வாறானதொரு தலைமை நான்தான் தலைவர் என்று சொல்லி உருவாக்கப்பட முடியாது.  தானாகவே உருவாகிறவர்கள்தான் தலைவராக இருக்க முடியும். அதுவரைக்கும்  நாங்கள் பேசா மடந்தைகளாக இருக்க முடியாது. எங்களால் அரசியலைச் சுத்தப்படுத்துவதற்கும் எங்களுடைய பண்பாட்டைச் சுத்தப்படுத்தவதற்கும், எமது கலை கலாசாரம் கல்வி அனைத்தையும் பேணுவதற்கும் இங்கே உருவாகக் கூடிய களைகள் அனைத்தையும் நீக்க நீங்கள் முன்வரவேண்டும்.” என்றார்.