Breaking News

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விவரம்



மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் சிறிலங்காவில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தாக்கப்பட்டி ருப்பதாகவும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று ஜேவிபி உறுப்பினர் நளின்த ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“2006 ஜனவரி மாதம் தொடக்கம், 2015 ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியிலேயே, 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில், ஊடகவியலாளர்கள் மீது 87 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு ஊடகவியலாளர் ( பிரகீத் எக்னெலிகொட) காணாமற்போகச் செய்யப்பட்டார்.

அத்துடன் 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

மேலும் இந்தக் காலப்பகுதியில் நான்கு ஊடக நிறுவனங்கள் மீது ஐந்து தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.