Breaking News

ஐ.தே.கட்சியை வளர்ப்பதையே கூட்டமைப்பு செய்கிறது(காணொளி)

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என மன்னாரில் நான் ஏற்பாடு செய்து நடத்திய தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்? நிகழ்வில் சொன்னார்கள் அது காணாமல் போய் விட்டதாக என்று மன்னார் மாவட்டப் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அந்தத் தீர்மானத்தின் அடிப்படை என்ன? எந்தெந்த நாடுகளுக்கு எவ்வாறான கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என அவர்கள் ஏலவே தீர்மானித்திருப்பார்கள்.



ஆகவே, எங்களுடைய அரசியல் தலைமைகளும், சிவில் சமூகத்தினரும் தமிழ்மக்களை ஏமாற்றியுள்ளனர். பாவம் தமிழ்மக்கள்.

மாறி மாறி அறிக்கைப் போர்களும், ஊடகங்களுக்குச் சுவாரஸ்யமான செய்திகளும் தான் கிடைக்கப் பெற்றனவே தவிர தமிழ்மக்களுடைய வாழ்வியல் போக்குக்கோ அல்லது பாதிக்கப்பட்ட இனக் குழுமத்தின் செயற்பாட்டிற்கோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை எந்தத் தரப்பும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

மனித உரிமைகள் விவகாரத்தையும், விடுதலைப் புலிகள் என்ற கோட்பாட்டைக் கையிலெடுப்பவர்களும் பிரபலமாகி விடலாம் என்ற அடிப்படை வாதத்தின் கருத்தோடு தான் எங்களுடைய மனிதவுரிமைகளின் செயற்பாடுகள் முன்னகர்கின்றதோ என்ற விவாதமும் உண்டு.

ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் அல்லது விடுதலைக்காகப் போராடுகின்ற இனத்தின் போராட்டம் சர்வதேச சதி வலையின் பின்னால் நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டதொரு காலகட்டத்தில் அதே விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்குகின்ற துர்ப்பாக்கிய நிலையில் தமிழ்மக்கள் தற்போது சிக்கித் தவிர்க்கிறார்கள்.

இந்தச் சிக்கித் தவிர்க்கின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டு விடுதலைக்கு மாறாகவிருந்தவர்கள் விடுதலை விரும்பிகள் என்ற அடிப்படை வாதக் கருத்தியலுக்கு எத்தனை வீதம் யதார்த்த பூர்வமாக அணுகப் போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையில்லை.

தான் தோன்றித்தனமான கருத்துக்களும் , தத்துவார்த்தம் என்று நினைத்துக் கொண்டு பேசுகின்ற வேத மந்திரங்களும் தமிழ்மக்களை ஏமாற்றுவதற்காகத் தமிழ்த் தலைமைகள் கையாளும் வழிமுறைகளாகவுள்ளன.

எல்லோரும் தங்களுடைய பதவி சுகபோகங்களையும், பாராளுமன்றக் கதிரைகளையும், மாகாண சபைக் கதிரைகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், அடுத்து வருகின்ற தேர்தலில் சீற் எடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் தமிழ்மக்களைப் பகடைக் காய்களாகப் பாவிக்கிறார்கள்.

அடுத்து வருகின்ற தேர்தல்களில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகின்ற கோஷங்கள் என்ன?, அந்தக் கோஷங்களை எவ்வாறு தமிழ்மக்கள் எதிர்நோக்கப் போகிறார்கள்?

எதிர்ப்படுகின்ற கோஷங்களுக்கு வாக்களிக்கக் கூடிய நிலையில் தமிழ்மக்கள் உள்ளார்களா? என்கின்ற கேள்விகளுக்குத் தமிழ்மக்களுக்குத் தலைமை தாங்குகின்றோம் என்று சொல்லும் தலைமை பொறுப்புக் கூற வேண்டிய தேவையிருக்கிறது எனவும் மன்னார் மாவட்டப் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான வி.எஸ்.சிவகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியுமான சி. அ.யோதிலிங்கம், யாழ்.பல்கலைக் கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்