Breaking News

பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்



சிறிலங்கா பிரதமர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக்காலை சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக, ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு சிறிலங்கா அதிபரைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சுதந்திரமான குழுவாக நாடாளுமன்றத்தில் அமரப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு வரும் ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியிருந்தனர்.

எனினும், சிறிலங்கா அதிபர் அந்த திட்டத்தை உறுதியாக நிராகரித்து விட்டதுடன், அவ்வாறு செய்தால் தாம் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.