ஆள வந்தான்: யாருக்கும் அடிமை இல்லை: யாருக்கும் அரசன் இல்லை
6 வயதில் அரிதாரம் பூசி களத்தூர் கண்ணம்மாவில் களமிறங்கி 50 ஆண்டுகள் தாண்டி சினிமாவை ஆளும் கமல்ஹாசன் இன்று அரிதாரம் பூசாமல் அரசியல்வாதி எனும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மரபணு மாற்றப்பட்ட பூ, பிளாஸ்டிப் பூ என்றெல்லாம் தொடர் விமர்சனங்கள் வந்தபோதிலும் எதையும் காதில் போட்டு கொள்ளாமல் நான் பூ அல்ல விதை. விதைத்த பின் பாருங்கள். தடைகளை தாண்டி சரித்திரம் படைப்போம் என்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கி விட்டார். ஆனாலும் கமல் விஷ பரீட்சையில் இறங்குவதாகவும் ஜெயலலிதா இருந்தபோது இருந்த இடம் தெரியாது வாய் திறக்காமல் இருந்தவர். விஸ்வரூப பிரச்சினையின் போது நாட்டை விட்டு ெவளியேறுவேன் என்று கண்ணீர் விட்டவர் இப்போது பேசுகின்றார். இது சினிமா அல்ல அரசியல் என்று கமலுக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிப்பதை விட செயலில் இறங்கி சாதிப்போம். என் கட்சியில் எல்லோரும் சமமே. நான் யாருக்கும் அரசனில்லை.
யாருக்கும் அடிமையில்லை என்ற தனக்காக எழுதப்பட்ட பாடல் நிதர்சனமானது என்பது போல இங்கு தலைவன் இல்லை. தலைவர்கள் நீங்கள் தான் என மக்களை கைகாட்டிய கமல் இறுதி மூச்சு உள்ள வரை உங்களுக்காகவே எனது வாழ்க்கை என உருக்கத்துடன் முழங்கியுள்ளார். அதற்கிணங்க 6 கிராமங்களை தத்தெடுத்து அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற விடயம் பாராட்டத்தக்கதே. வெறும் பேச்சு என்பதை விட செயல் என்று செயற்பட தொடங்கி விட்டார். இப்போது தமிழக மக்களின் பார்வை கமலை நோக்கி ஈர்க்கப்பட்டு விட்டது.
தமிழக அரசியல் என்பது ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் மூப்பு காரணமான ஓய்வால் துடிப்பு இல்லாத படகு போல தத்தளித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு யாரை நம்புவது யாருக்கு வாக்களிப்பது என்று கூட தெரியவில்லை. ஜெயலலிதாவின் சொந்த தொகுதியில் இரட்டை இலை தோற்றதும் தி.மு.க. படுதோல்வியை சந்தித்ததுமே இதற்கு நல்ல சான்று. இந் நிலையில் சினிமா மோகம் என்பது தமிழ்நாட்டை பொருத்த வரையில் தவிர்க்க முடியாத ஒன்று அங்கு சினிமாவும் அரசியலும் ஒன்றர கலந்தவை . இதனால் தான் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரஜினி கமல் விஜய் அஜித் உள்ளிட்ட சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் தங்களது கதாநாயகர்களை அரசியலுக்கு வருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் 20 வருடங்களுக்கு மேலாக ரஜினிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்தது ரஜினியின் குரல் தான். அப்போது நினைத்திருந்தால் அவர் முதல்வராக கூட ஆகியிருக்கலாம். ஏனெனில் ரஜினிக்கு அப்படி ஒரு மக்கள் செல்வாக்கு அப்போது இருந்தது. அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே முதல்வர் என்ற நிலை உருவானது. ஆனால், ''வரும் போது வருவேன் வருவேன் என்று கூறிய அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின்னர் இப்போது "நான் அரசியலுக்கு வந்துட்டேன்... போர் வந்தால் பார்த்து கொள்வோம்" என்று அறிவித்து தனது கட்சியை கட்டமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஆனால், ரஜினி போல கமல் இல்லை. அவர் அரசியலில் நேரடியாக எந்த கருத்தையும் வைத்தில்லை. சினிமாவுக்கு நடிப்புக்கு என்றே பிறந்தவராக கலைக்கு இலக்கணமாக மாறியவர் கமல். நடிகர் திலகத்தின் கலை வாரிசாக மட்டுமே கமல் இதுவரை பார்க்கப்பட்டார். கமலின் ஒவ்வொரு படமும் வெவ்வேறானதாக இருக்கும். சினிமாவில் அவதாரம் எடுப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. தமிழகம், இந்தியா தாண்டி உலகமே கமலை உலக நாயகனாக நிரந்தர இளைஞனாக கொண்டாடுகிறது.
விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை கமல் எடுத்த போது அதனை ெவளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அவரை எதிர்த்து அரசியல் செய்வது சிம்ம சொப்பனம் போன்றது. அது கருணாநிதியால் மட்டுமே முடிந்தது. அந்த காலத்தில் கமல் தனக்கு ஏற்பட்ட அழுத்தத்தினால் நாட்டை விட்டு ெவளியேறுவேன் என்று பகிரங்கமாக ஊடகங்களிடம் தெரிவித்தார் அதுவும் கண்ணீர் வடித்து கொண்டே. ஆனால், அந்த திரைப்படம் ெவளியானது. அப்போது இருந்தே அவருக்கு அ.தி.மு.க. மீது ஒரு மனக்கசப்பு இருந்த போதும் அவர் அதனை ெவளிக்காட்டியதில்லை.
ஜெயலலிதா மறைந்த பின்னர் கருணாநிதியும் சுகயீனமுற்று செயலிழந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் சசிகலா முதல்வராக முயற்சித்தமை, கூவத்தூர் கூத்து, தினகரன் வென்றமை, ஓ.பி.எஸ்.ஸின் தர்ம யுத்தம் பா.ஜ.க.வின் கைப்பொம்மையாக அரச நிர்வாகம் மாறியமை. தமிழகத்துக்கு நன்மை பயக்காத மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றமை. அமைச்சர்களின் செயற் திறனற்ற செயற்பாடுகள் என்பன காரணமாக ஆளும் அ.தி.மு.க. மீதான வெறுப்பு எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் கமல் தொடர்ந்து டுவிட்டரில் தமிழக அரசை விமர்சித்து எழுதிக் கொண்டே வந்தார். நேரடியாக பேட்டிகளும் தந்தார். மேடைகளில் தோன்றி துணிச்சலாக அரசின் நிர்வாகத்தை விமர்சனம் செய்தார். பிக்பொஸ் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கமல் கூறியது சர்ச்சைக்குள்ளானது. வார இதழ்களிலும் சமூகம் சார்ந்து அரசியல் நிலைகள் சார்ந்து, வாசிப்புகள் சார்ந்து தனது புரிதல்கள் எவ்வாறு உள்ளன, மாற்றங்களை எப்படி செய்ய முடியும் என்பதையெல்லாம் வெளிப்படுத்தும் விதமாக கேள்வி பதில்கள், தொடர் கட்டுரைகள் என எழுதினார்.
தமிழக அரசின் நிர்வாகத்தை தொடர்ந்து அவர் விமர்சிப்பதும் அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பதும் பதிலுக்கு கமல் ஒன்று சொல்வதுமென கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் தலைப்புச்ெசய்தியானார் கமல். அனிதா மரணம், ஆர்.கே. நகர் தேர்தல் என மக்கள் உணர்வதை துணிச்சலாக சொல்ல தொடங்கினார். தமிழக அரசியலில் ஊழல் நடப்பதாக அவர் கூறிய கருத்துகளுக்கு அமைச்சர்கள் நிரூபிக்குமாறு சவால் விட்டனர். உடனே கமல் மக்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
அதாவது ஊழலால் பாதிக்கப்பட்ட மக்கள் அது தொடர்பில் துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவியுங்கள், கேளுங்கள் என்று அமைச்சர்களின் இணைய முகவரிகளை பகிரங்கமாக தனது இணைய பக்கத்தில் ெவளியிட்டார். ஆனால் சற்று நேரத்தில் அமைச்சர்கள் தங்களது இணைய முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பனவற்றை அழித்து விட்டனர். கொஸ்லந்தை ஆற்றில் கழிவுகள் கொட்டப்பட்டதை விமர்சித்த கமல் ஓர் அதிகாலையில் யாரும் எதிர்பாராது நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்தார். இப்படி கமலின் அரசியல் ஆட்டம் மறைமுகமாக தொடங்கியது.
இதனிடையே நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கமலிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன் என்று அவர் பதிலளித்தார்.
அண்மையில் நியூயோர்க் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய கமல், ''கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.'' என்று பேசிய போது தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். ''அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு'' என்று கூறிய போது அவரது அரசியல் பயணம் உறுதியானது.
''திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக் கூடாது'' என்ற அவருடைய பேச்சு அவரது சமூக பார்வை, புரிதல்கள் மீதான நம்பிக்கைக்கு அவரே பாதை அமைத்து தருவதை பார்க்கமுடிந்தது.
வெறுமனே பேச்சாக மட்டுமில்லாமல் அமெரிக்காவில் சில விஞ்ஞானிகளையும் சந்தித்தார் கமல். தமிழகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரம் தாங்களே தயாரித்து கொள்வதற்கான முன்னேறி வரும் விஞ்ஞான சாத்தியங்களை அறிய விஞ்ஞானிகளிடம் அவர் கலந்துரையாடினார்.
அனைத்திலும் வித்தியாசமாக புதுமையை செய்யும் கமல் தனது கட்சியின் பெயரையும் புதுமையாகவே அறிவித்தார். "மக்கள் நீதி மய்யம்" அதாவது யாரையும் சாராமல் யாரையும் வெறுக்காமல் நடுப்புள்ளியில் இருப்பதே இதன் பொருள். இது புதுமையானதாக உள்ள போதிலும் தமிழக அரசியலில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே...
அதுமட்டும் அல்ல தான் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவ பாடங்களுக்காக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என பலரையும் சந்தித்து பேசுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலுக்கு எதிரான இயக்கத்தை தொடங்கி இளைஞர்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியை பிடித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையிலேயே தனது புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது ேமாடிக்கு எதிரான அரசியலாக பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் தமிழகத்துக்குள் எப்படியாவது பா.ஜ.க. கால் ஊன்றி விட வேண்டுமென துடிக்கிறது. இந் நிலையில் ரஜினியும் கமலும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந் நிலையில் மோடி அரசுக்கு எதிரியான கெஜ்ரிவாலை அழைத்து வந்து கட்சியை தொடங்கியுள்ளார். ஊழல் இல்லாத ஆட்சி என்பது கமலின் எதிர்பார்ப்பு. இது சாத்தியப்படுமா. சினிமாவில் தான் சம்பாதித்ததை சினிமாவுக்கே செலவிட்ட கலைஞன் கமல் மட்டுமே. அவர் தனக்கென்ற எதையும் வைப்பதில்லை.
தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு மாற்ற உழைத்து பணம் அனைத்தையும் சினிமாவுக்கே திருப்பி கொடுத்தவர். இது அரசியலில் சாத்தியமாகுமா.. கமலின் அருகில் உள்ள அனைவருமே கமலை போல இருப்பார்களா பதவி மோகம் பணத்தாசை இல்லாத மக்கள் சேவகர்களாக எப்போதும் இருப்பார்களா... என்று தெரியாது. ஆனால் கமல் "இங்கு அனைத்துமே மக்களிடம் தான் இங்கு நான் முதல்வன். நீ முதல்வன் அல்ல. மக்களே முதல்வர்கள்" என்று கூறி விட்டார்.
அவரது மய்யம் இணையத்தளம் இப்படி சொல்கிறது, ''70 ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காக செயலாற்ற வேண்டிய தருணம் இது. மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே!
ஆனால், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மிகப்பெரிய இயக்க பின்புலம் கொண்டவர்களாலேயே தங்கள் அமைப்புகளில் தூய்மையை நேர்மையை கடைப்பிடிக்க இயலாத நிலையை தமிழகம் காண நேர்ந்தது. மேலும் சினிமாவிலிருந்து வந்த நடிகர் திலகம் சிவாஜியையே மக்கள் தோற்கடிக்கத் தானே செய்தார்கள். பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்து கண்டது என்ன?'' என்று ேகள்வி எழும்புகிறது.
ஆனால், கமலின் கட்சி முன்னெடுப்பு செயல்களில் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையை பார்க்க முடிகிறது. நானே செய்வேன். நானே சாதிக்க போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. தமிழகம் மாற வேண்டும் என்று சிந்திக்கும் இளைஞர்களோடு அவர் கைகோர்க்க விரும்புகிறார். அவர் தனது அரசியல் பயணத்தை இராமேஸ்வரத்தில் தொடங்கிய போது மீனவர்களுடனான சந்திப்பில் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அப்போது தனக்கு பொன்னாடை போர்த்தும் வழக்கம் இல்லை. அதனால் தன்னையே போர்த்துவதாக கூறி மீனவர்களை கட்டியணைத்து கொண்டார்.
இங்கு மீனவ நண்பனான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவுக்கு வருகிறார். அதைப்போலவே 'நாளை நமதே' என்ற எம்.ஜி.ஆரின் படத்தலைப்பிலேயே தனது அரசியல் பயணத்தையும் ஆரம்பித்துள்ளார். எம்.ஜி.ஆரை விடுத்து தமிழக அரசியலை பார்க்க முடியாது என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. கமலின் மக்கள் நீதி மய்யம் . சிறிய விதை போன்றது தான். இது எந்த மாதிரியான விருட்சமாக வளரவேண்டுமென மக்கள் தான் தீர்மானிக்க போகின்றார்கள். அது புதிய அவதாரமாக விஸ்வரூபம் எடுக்குமா? அல்லது புஸ்வானமாகி போகுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கமல் வயதை வைத்து யாரும் கிண்டல் செய்ய முடியாது. அது கூடாது. ஏனெனில் 100 வயதை தொடப்போகும் தி.மு.க. தலைவருக்கே அரசியல் ஆசை இருக்கும் போது கமலுக்கு இருக்கக் கூடாதா... கமல் என்றும் இளைஞர் தான்.. ஆளவந்தான் ஆண்டு தான் பார்க்கட்டுமே..
மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தற்போது கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அரசியல் களத்தில் இறங்கியுள்ள காலம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக களமிறங்குவது மக்களின் மனதில் குழப்பத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
மேலும், ரஜினி இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை. கமல் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அகிலம் போற்றும் அணுவிஞ்ஞானியும் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து ... அதுவும் இராமேஸ்வரம் எனும் புண்ணிய பூமியிலிருந்து தொடங்கி விட்டது கமலின் அரசியல் ஆட்டம். அது மதுரையை அதிர வைத்தது போல தொடர்ந்து தமிழக அரசியலில் அதிரடி காட்டுமா..
இதேவேளை, அவரது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை நாம் விமர்சிக்கக் கூடாது. பொது வாழ்க்கையில் ஏற்கனவே தனது கமல் நற்பணி மன்றம் மூலமாக பல்வேறு மக்கள் நல செயற்பாடுகளை செய்துள்ளார். உடல் தானம், இரத்ததானம் என்பன கூட அவரும் அவரது ரசிகர்களும் செய்துள்ளனர். அது மட்டும் அல்ல அவரது ரசிகர்களை கமல் எப்போதும் கட்டுப்பாட்டுடனேயே வைத்திருப்பார். அதனை மதுரை பொதுக்கூட்டத்தில் காண முடிந்தது.
அவர் இராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரை தனது அரசியல் பயணத்தை தொடங்கிய போது கூட பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத் தவில்லை. அன்றாட மக்கள் கடமைகள் எதற்கும் அவர்கள் தடை விதிக்கவில்லை. கமல் தனிப்பட்ட ரீதியில் நல்ல மனிதர் தான் அதனால் தான் எமக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கிடைத்தார். கமல் நினைத்திருந்தால் ரஜினியை வளர விடாமல் ஒரு இரண்டாம் நிலை கதாநாயகனுக்கான அந்தஸ்திலேயே வைத்திருந்திருக்கலாம். ஆனால், கமல் அப்படி செய்யவில்லை. ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பை அளித்தவரே கமல் என்பதில் மறுப்பில்லை.
கட்சி தொடக்க விழாவில் "நான் உங்கள் வீட்டு குத்துவிளக்கு என்னை ஏற்றி வைத்து பாதுகாத்தால் ஒளி தருவேன். வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டேன். குவாட்ரும், ஸ்கூட்டரும் தரமுடியாது. அதனை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும்படி உங்களது வாழ்க்கையை தரமேற்றுவேன்" என அதிரடியாக கூறிவிட்டார். இதனை தமிழக மக்கள் ஏற்பரா... ஜெயலலிதா தொகுதியிலேயே அ.தி.மு.க.வையும் இரட்டை இலையையும் தோற்கடித்த மக்கள் ... பணம் வாங்காமல் கொள்கைக்காக கமலை ஆதரிப்பார்களா.... சினிமாவில் பல விஸ்வரூபம் எடுத்து ஆண்டவர்.. அரசியலை ஆள்வாரா .....முதல்வராக விஸ்வரூபம் எடுப்பாரா...
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நா.வும் உன்னை அழைக்கும் என உண்மையிலே தமிழனை கமல் பெருமை கொள்ள வைப்பாரா... அதற்கு தமிழக மக்கள் துணை நிற்பரா என பொறுத்திருந்து பார்ப்போம்...
குமார் சுகுணா