ஆசிரியர் கௌரவிப்பு என அழைத்து பிறந்தநாள் கொண்டாடிய அரசியல்வாதி(காணொளி)
சுகிர்தன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பருத்தித்துறையில் பிரபலமான தங்ககம் ஒன்றில் மாவை சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஆதரவாளர்களுடன் சந்திப்பு என சொல்லப்பட்டபோதும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்தே முன்பள்ளி ஆசிரியர்கள் குடும்பங்களாக வரவழைக்கப்பட்டதாக அங்கு கலந்துகொண்ட முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
மார்கழித்திங்களல்லவா என்ற பாடலுடன் ஆரம்பமான கொண்டாட்டம் தொடர்ந்து இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் எனப்பிரச்சாரம் ஆரம்பித்து தமிழரசு கட்சியின் இணக்க அரசியல் தொடர்பில் ஆசிரியர்களுக்கு போதிக்கப்பட்டது.
வடமாகாணசபை பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவுபெறும் தருணத்தில் அடுத்தகட்ட அரசியலை பலப்படுத்துவதற்காக முன்பள்ளி ஆசிரியர் குடும்பங்களை கௌரவிப்பதாக அனைவரும் அழைக்கப்பட்டு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனின் பிறந்தநாள் கொண்டாடியதோடு தமிழரசு கட்சியின் அரசியலையும் முன்னெடுத்ததோடு அடுத்த தேர்தலிலும் மாகாணசபை உறுப்பினருக்கு வாக்களிக்குமாறு கோரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இன்நிகழ்வு இன்று மாலை பருத்தித்துறையில் உள்ள சூரியமஹால் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் 24ம் திகதி முதலமைச்சர் தனிவழி செல்வதாக அறிவித்ததில் இருந்து கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு, வவுனியா,யாழ் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதி மற்றும் சுமந்திரன் ஆகியோர் பிரச்சார கூட்டங்களை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி கட்சியினரால் போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுவதுபோன்ற ஒரு இழி நிலைக்கு தமிழரசு கட்சியும் இன்று தள்ளப்பட்டுள்ளதாக அங்கு வந்திருந்த ஓய்வுபெற்ற செய்தியாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.