Breaking News

எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன்

நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்ய இருக்கும் நடவடிக்கை களையும் மக்களுக்கு எடுத்து உரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். 

ஆனால் மற்றவர்கள் செய்யும் கபடமான, பிழையான விமர்சனங்களுக்குப் பதில் அளித்தே தீரவேண்டும் என்ற கருத்தும் கொண்டவர்கள் நாங்கள். அடித்தால் அடிப்போம். நாங்களாக அடிக்க மாட்டோம். - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன். 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை நேற்று மாலை யாழ் தொல்புரம் வழக்கம்பரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்கு தலைமையுரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட தொல்புரம் வழக்கம்பரையில் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ் தேசிய கூட் டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களான க.வி. விக்னேஸ்வரன், சுரேஷ் பிறேமச் சந்திரன், ந.சிறீகாந்தா, அனந்தி சசிதரன், க.அருந்தவபாலன், க.இரத்தினகுமார், மீரா அருள்நேசன், சி.விசகுமார், 
த.சிற்பரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அங்கு உரையாற்றுகையில் விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது :

எங்களைப் பலர் கேட்கும் ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பதையே இந்தப் பேச்சின் கருவாக ஆக்க உள்ளேன். கேள்வி இது தான் - 

உங்கள் கூட்ட ணிக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண் டும்? உங்கள் தனிச் சிறப்பு என்ன? 

முதலாவது காரணம் - எமது கூட்டணி கொள்கைபாற்பட்டது. 

இரண்டாவது - எங்கள் கூட்டணியில் அரசியலுக்குப் புதியவர்களும் இருக்கின் றோம். அந்த விதத்தில் எமது கட்சி புதி யவர்களை அரசியல் அரங்கத்தினுள் உள்ளேற்க முன்வந்துள்ளது. அரசியலில் பல வருடகாலமாக ஈடுபட்ட பழுத்த அனுபவசாலிகளும் இருக்கின்றோம். அரசியல் அனுபவம் மிக்க நண்பர்கள் ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிறேமசந்திரன் மற்றும் சிவாஜி லிங்கம் போன்றோரைப் போல் அரசியலில் அனுபவம் மிக்கவர் அருந்தவபாலன் அவர்கள். 
அவர் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர். நானும் அனந்தியும் வடமாகாணசபை அரசியலில் இருந்து வந்தவர்கள். 
மற்றையவர்களான திருமதி மீரா அருள்நேசன் மற்றும் சிற்பரன், இரட்ணகுமார், சிவகு மார் ஆகியோர் அரசியலுக்குப் புதியவர்கள். 
ஆகவே அனுபவஸ்தர்களுடன் அரசியல் சார் புதுமுகங்களும் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்பது எமது சிறப்பியல்புக ளில் ஒன்று. 

மூன்றாவது - எமது கூட்டணி ஓர் எழுத்து மூல உடன்பாட்டின் அடிப்படை யில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. கொரோனாவின் தாக்கத்தால் எமது நட வடிக்கைகள் தடைப்பட்டிருந்தாலும் இப் பொழுது நாங்கள் சுதாகரித்துக் கொண்டு எழுந்து நிற்கின்றோம். தேர்தலுக்கு 38 நாள்களே உண்டு. நாம் எழுந்து நிற்கின் றோம் என்றால் அது எமது கூட்டு முயற் சியின் வெற்றி என்றே கூற வேண்டும். வெறும் ஒன்றரை ஆண்டுகள் நிரம்பிய எமது தமிழ் மக்கள் கூட்டணி எம்முடன் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் சுயாட்சிக்கழகம், இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியோரின் ஒத்துழைப்பால் இன்று ஒரு பலத்த தேசியக் கூட்டணியாக பரிண மித்துள்ளோம். 

நான்காவது - சிறப்பியல்பு நாங்கள் வெளிப்படையாக இயங்கும் ஒரு கூட்டணி. எமது கட்சியில் ஊழல் இல்லை. வெளிப்படைத் தன்மையுண்டு. இவ்வியல் புகளை மற்ற முக்கிய கட்சிகளில் நீங்கள் காணமாட்டீர்கள். எமக்குக் கிடைக்கும் பொதுப்பணம்யாவற்றிற்கும் கணக்கு வைத்துள்ளோம். கணக்கு காட்டுவோம். நாம் எமது சொத்து விவரங்களை மிக விரைவில் வெளிக் கொண்டு வருவோம். 

ஐந்தாவது - சிறப்பியல்பு நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதி லேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால் மற்றவர்கள் செய்யும் கபடமான, பிழையான விமர்சனங்களுக்குப் பதில் அளித்தே தீரவேண்டும் என்ற கருத் தும் கொண்டவர்கள் நாங்கள். அடித்தால் அடிப்போம். நாங்களாக அடிக்க மாட் டோம். 

அரசியல் ரீதியான எமது கொள்கைகளைப் பரிசீலித்தீர்களானால் வடகிழக்கு இணைப்பும் அங்கு சமஷ்டி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்பதுமே எமது குறிக் கோள். அதை அடைவதற்கு நாங்கள் செய்யவிருக்கும் நடவடிக்கை ஐக்கிய நாடுகள், வல்லரசுகள், புலம்பெயர் உறவுகள் ஆகியோரின் ஆதரவு பெற்று வடக்கு கிழக்கில் மக்கள் தீர்ப்பைப் பெறவைப்பது. எமது தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமக்கு சமஷ்டி வேண்டும் என்று கூறினால் அதனை நடைமுறைப்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும். அதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுவோம். 
இவ்வாறான மக்கள் தீர்ப்பு பல நாடுகளில் எடுக்கப்பட்டு அரசியல் பிரச் சினைகள் முன்னர் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை மனதில் வைத்து நாம் எமது தன்னாட்சிக்கான நடவடிக்கைகளில் இறங்க இருக்கின்றோம். 

அடுத்து எமது மக்களின் மனோ நிலையை மாற்ற இருக்கின்றோம். எனவே தற்சார்பை நாங்கள் ஒரு கோட்பாடாக எமது மக்களிடையே நிலைநிறுத்த உத்தேசித்துள்ளோம். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். ஆசிரியர்கள் பலரையும் மேலும் தொழில் ரீதியாக முக்கியமான தொழில்களில் ஈடுபட்டவர்களையும், அரசியலில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர்களையும் எமது கூட்டணி வேட்பாளர்களாகக் கொண்டுள்ளோம். . - என்றார்.