Breaking News

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் - கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கைது!

மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி வீதியில் வாகனங்களில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேரை இன்று (01) கைது செய்ததுடன், 4 வான்கள் 7 மோட்டர் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கியன் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் இன்று காலை 9 மணி அளவில் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகனனங்கள் மோட்டர் சைக்கிள்களில் பவணியாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்திய போது அதில் பொலிஸாருக்கும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேரை பொலிஸார் கைது செய்யத நிலையில் ஏனையோர் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து 4 வான், 7 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.