Breaking News

கொரோனா பற்றி உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி?

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் அனைத்தும் நம்மை எளிதாக வந்தடைகிறது. பெரியவர்கள் நமக்கே பதற்றத்தை ஏற்படுத்தும் போது குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். அவர்களுக்குள் ஓடும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூட தெரியாது. ஒவ்வொரு நாளும் கொரோனா பற்றிய செய்திகளை ஆன்லைனில் அல்லது டிவியி அவர்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். எனவே இது அவர்களுக்கு மன அழுத்தம், பயம் மற்றும் சோகத்தை உருவாக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் குழந்தைகளுடன் ஒரு வெளிப்படையான, ஆதரவான கலந்துரையாடல் அவசியம் தேவைப்படுகிறது. இப்போது குழந்தைகள் அனைவரும் விடுமுறை மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியை தடுக்க வேண்டாம். இந்த விஷயங்களை உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி என்பதற்கான குறிப்புகளை இப்பதிவில் காணலாம். 

1. அவர்கள் சொல்வதை கவனியுங்கள் 

உங்கள் குழந்தைக்கு இந்த கொரோனா வைரஸ் பற்றி என்ன தெரிந்திருக்கிறது என்று அறிய உங்களிடம் பேச வைப்பதே முதல் வேலை. டிவி பத்திரிக்கை குடும்பத்தினர்கள் சுற்றத்தார் நண்பர்கள் என அனைவரிடமும் இருந்து நிறைய தகவல்களை குழந்தைகள் சேகரித்து வைத்திருப்பார்கள். இந்தப் பிரச்சனை பற்றி என்ன புரிதலில் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். உங்கள் பிள்ளையை ஏதுனும் ஆக்டிவிட்டியில் ஈடுபட வைத்து கொரோனா வைரஸ் பற்றி மெல்ல கேட்கலாம். அவர்கள் எப்படி இதை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று முழுமையாக கேட்டு அதற்கேற்ப விளக்கம் அளிக்கலாம்.  

இந்த வைரஸ் பற்றி கவலை அளிப்பதாக தெரிந்தால் அவர்களுக்கு தைரியம் சொல்லி தூய்மையுடன் இருப்பது மற்றும் சமூக விலகலை பின்பற்றுவது போன்ற முக்கிய அம்சங்களை கடைபிடித்தாலே போதும் கவலைப்பட வேண்டாம் என்று தெளிவு படுத்துங்கள். இந்த வைரஸ் பற்றிய பயம் இருந்தால் அவர்களை கேலி செய்யாமல் பயம் வருவது இயற்கை, நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதை சொல்லுங்கள். நீங்கள் அவர்களுக்கு முழு கவனம் செலுத்துவதை உணர செய்யுங்கள். இது பற்றி எந்த சந்தேகம் என்றாலும் நீங்கள் தயராக இருப்பதை உறுதி படுத்துங்கள். இந்த வைரஸ் பற்றி தெரியாத சிறு பிள்ளைகளுக்கு தூய்மையுடன் இருப்பதையும் இதனால் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை மட்டும் விளக்குங்கள். அவர்களுக்குள் பயத்தை திணிக்காதீர்கள்.  

2. உண்மையை சொல்லுங்கள்  

குழந்தைகளுக்கு இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முழு உரிமை உண்டு. அதனால் பெரியவர்களாகிய நாம் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு இந்த வைரஸை பற்றி பதட்டத்தை உண்டாக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இது பற்றி அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்லாமல் ஆராய்ந்து குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்தலாம். அந்த தேடலில் அவர்களையும் சேர்த்து கொள்வது மேலும் சிறப்பு. இணையத்தில் வரும் அனைத்து விஷயங்களும் உண்மையல்ல சிறந்த வல்லுநர்கள் சொல்வதை மட்டும் நம்பவேண்டும் என்று புரிய வையுங்கள். UNICEF and the World Health Organization(WHO) போன்ற சர்வேதேச இணையதளங்கள் சிறந்த தகவல்கள் தருவதை பகிர்ந்து கொள்ளலாம்.  

3. தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது  


கொரோனா வைரஸ் போன்ற பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள அடிக்கடி கை கழுவுதலை கற்றுத் தர வேண்டும், கை கழுவாமல் இருந்தால் அந்த நோய் வந்து விடும், ஹாஸ்பிடல் போய் ஊசி போடணும் போன்று அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டாம். அவர்களுக்கு ஒரு பாட்டு பாடி மகிழ்ச்சியோடு, ஆக்டிவிட்டியாக அந்த செயலை செய்ய வைக்கும் போதும் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். தும்மல் அல்லது இருமல் வரும்போது முழங்கையால் எப்படி மறைத்து தும்முவது, எவ்வாறு ஒருவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும், கொரோனா அறிகுறிகள் உள்ள நபர் இருந்தால் உடனே பெரியோரிடம் தெரிவிப்பது போன்ற விஷயங்களை எடுத்து சொல்லுங்கள்.  

4. அப்பப்பா…செய்திகள்  

டிவியிலும் இணையதளத்திலும் குழந்தைகளின் மனதை புண் படுத்தும் செய்திகளை பார்க்கும்போது நம்மை சுற்றிலும் இந்த நிலை தான் உள்ளது நமக்கும் இது நடக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த ஆக்டிவிட்டிகளை தந்து இயல்பான நிலையில் வைத்திருப்பது முக்கியம். உங்கள் பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதைப்பற்றியே மட்டும் பேசாமல் பாதுகாப்பாக இருப்பதை அழுத்தமாக சொல்வது போதுமானது. குழந்தைகள் உடல் நிலை சரிஇல்லாத போது அதிக கவனம் செலுத்துவது அவசியம்.  

5. கரோனாவை காரணம் காட்டி ஒதுக்குவது  


சில குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் சளி என ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதை பார்க்கிறோம். இந்த நேரத்தில் சாதாரண காய்ச்சல் என்றாலே கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது என மற்றவர் ஒதுக்குகிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் , நிறமோ,ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் இதில் கிடையாது என்று தெளிவுபடுத்துங்கள். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பிறகு அவர்களை ஒதுக்குவது சீண்டுவது தவறு. அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

6. நம்பிக்கை நட்சத்திரம்  

இந்த சூழலில் பல நல்ல மனிதர்கள் அன்பையும் தாராள மனப்பான்மையுடன் மற்றவருக்கு உதவி செய்து வருவதையும் குழந்தைகளிடம் வெளிப்படுத்துங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற பணியாளர்கள் சிறந்த பங்காற்றி நம்மை காப்பாறுகிறார்கள் என்று சொல்லுங்கள். இதனால் அதிகம் குணமடைந்திருப்பதை சொல்வதால் நாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு பிறக்கும்.  

7. உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்  

பெற்றோர் நாம் இந்த சூழலில் சம நிலையுடன் இருப்பது தான் உங்கள் குழந்தைகளையும் அமைதிப்படுத்தும். இந்த வைரஸால் உங்களுக்கு பாதிப்பு உண்டாகிவிடுமோ என்று வருத்தமோ பதட்டமோ இருந்தால் உங்கள் நண்பருக்கோ குடுமபத்தினருக்கோ அழைத்து உங்கள் கவலையை பகிரலாம், அவர்களது ஆறுதல் உங்களை அமைதிப்படுத்தும்.    

8.அன்பும் அரவணைப்பும்  

குழந்தைகளுக்கு எப்போதும் உங்கள் அரவணைப்பு இருக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள், அவர்களது பேச்சில் பதட்டம் அல்லது உடல் மொழியில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா, அவர்களது தனித்து இருக்கிறார்களா போன்றவற்றை கவனியுங்கள. வருத்தத்தில் இருக்கும்போது அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் உதவ, பாதுகாக்க நீங்கள் இருப்பதை அடிக்கடி உறுதிப்படுத்துங்கள்.