Breaking News

அமெரிக்காவில் மறு வாக்கு எண்ணிக்கை: தேர்தலில் திடீர் திருப்பம்!

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் முடிவடைந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட்டார்.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். ட்ரம்புக்கு சாதகமாக இருந்த சில மாகாணங்களும் பைடன் வசம் போய்விட்டன. இதன் உச்சகட்டமாக, இதுவரை ட்ரம்ப் முன்னிலையில் இருந்த ஜார்ஜியா மாகாணத்தில் இன்று ஜோ பைடன் முன்னிலைக்கு வந்தார்.

ஜார்ஜியாவில் ட்ரம்பை விட ஜோ பைடன் சுமார் 1,500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ட்ரம்ப், தேர்தல் திருடப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், சட்டரீதியான வாக்குகளை மட்டும் எண்ணியிருந்தால், தான் வெற்றிபெற்றிருக்கக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜார்ஜியா அரசு செயலாளர் பிராட் ரேபன்ஸ்பெர்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மிகச் சிறிய வக்கு வித்தியாசம் இருப்பதால் ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை தீர்மானிக்கப்போவதே ஜார்ஜியாதான். எனவே, ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசு கட்சிக்கு பாரம்பரியமாகவே வெகுவான ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், ஜார்ஜியாவில் நடக்கப்போகும் மறு வாக்கு எண்ணிக்கையை இரு கட்சிகளை சேர்ந்த நோக்காளர்களும் கண்காணிக்க அனுமதி வழங்கப்படும் என்று பிராட் ரேபன்ஸ்பெர்கர் தெரிவித்துள்ளார்.