Breaking News

இன்று ஆரம்பமானது நற்பலன்களைத் தரும் நவராத்திரி விரத வழிபாடு!


26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம் சிவனை வழிபட ஒரு ராத்திரி, 'சிவராத்திரி'. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் 'நவராத்திரி'. 

ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம். 

* நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் அனைவரும், விரதம் இருந்து கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். 

 *நவராத்திரி பூஜையின் ஒன்பது நாட்களும், ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை காண்பவர்களுக்கு, நவராத்திரி பூஜை செய்ததற்கான பலன் முழுமையாக கிடைக்கும். 

* அம்பாள் ஒரு சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரியின் அனைத்து நாட்களிலும், அம்பாளை சிறப்பிக்கும் வகையிலான பாடல்களில் ஒன்றையாவது பாட வேண்டும்.

 * நவராத்திரி நாட்களில் பகல் வேளையில் சிவபெருமானையும், இரவு நேரத்தில் அம்பிகையையும் பூஜை செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவில்லாத பலன்களைப் பெறலாம்.  

செய்யக் கூடியது என்ன? 

* இன்றைய காலகட்டத்தில் வீட்டில் கோலமிடும் பலரும், சுண்ணாம்பு மாவைதான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நவராத்திரியின் ஒன்பது தினங்களில் மட்டுமாவது அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து அருள்வாள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும். 

* நவராத்திரி ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் நைவேத்தியம் படைப்பது அவசியம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

மாலைமலர்