Breaking News

153 அகதிகளையும் திருப்பி அனுப்ப அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!


ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி வந்த
இலங்கையர்கள் 153 பேரை அந்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தஞ்சம் கோரி வந்த 41 அகதிகளை கடலிலேயே விசாரித்து, நிராகரித்த பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்துள்ள நிலையில் இந்த இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புகலிடம் கோரியவர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியது குறித்த வழக்கை சந்திப்பார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடை உத்தரவு இன்று மாலை 4 மணி வரையில் மாத்திரமே அமுலில் இருக்கும் என்றும் இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்றும் இடம்பெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களையே இவ்வாறு திருப்பி அனுப்புவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவினை விசாரணை செய்த சிட்னி உயர்நீதிமன்ற நீதிபதி சுசான் கிரினானன், இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த 153 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.