Breaking News

ஓமந்தையில் நடந்தது என்ன?-விபரிக்கிறார் கைதான ஊடகவியலாளர்


கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகப்
பயிற்சி நெறி ஒன்றில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகர்கள் குழு ஓமந்தை சோதனைச் சாவடியில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பல மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு இம்சைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மயூரப்பிரியனின் பகிர்வு

கடந்த வெள்ளிக்கிழமை, ஊடக பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது.

அதன் படி நானும் அங்கே நின்றேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் மாலை 6.30 மணியளவில் எமது நண்பர் குழாம் 6 பேர் ஒரு வாகனத்திலும் ஏனையவர்கள் 6 பேர் மற்றுமொரு வாகனத்திலுமாக அங்கிருந்து கிளம்பினோம்.

எம் வாகனம் மற்றைய வாகனம் கிளம்பி 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து கிளம்பியது. நாம் கச்சேரியடியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எமது வாகனத்தை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததை அவதானித்தோம்.

அவர்கள் எதேச்சையாக எம் பின்னால் வருகின்றார்கள் என்று கருதி அதனை நாம் பெரிது படுத்தவில்லை. வந்தவர்களையும் கைதடி சந்திக்கு அங்கால நாம் காணவில்லை. நாம் எமது பயணத்தை தொடர்ந்தோம். இரவு 8 மணியளவில் எமக்கு முன்னால் வாகனத்தில் சென்றவர்கள் தாம் முறிகண்டியில் நிற்பதாகவும் எம்மை விரைந்து வருமாறு தொலைபேசியில் கூறினார்.

நாம் முறிகண்டியை 8.15 மணியளவில் சென்றடைந்தோம். எமக்கு முன்னால் சென்றவர்கள் வன்னியை சேர்ந்த 3 ஊடவியலாலர்களை தம்முடன் அழைத்து சென்று எமக்காக காத்திருந்தார்கள். முறிகண்டி பிள்ளையாரை தரிசித்து விட்டும் தேநீர் அருந்தி விட்டும் எமது பயணத்தை தொடரும் போது எமது வாகனத்தில் எமது நண்பர்களில் ஒருவரான வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரையும் இணைத்து கொண்டு எமது பயணத்தை தொடர்ந்தோம்.

முறிகண்டியில் இருந்து கிளம்பும் போதும் மற்றைய வாகனத்தை முன்னால் செல்ல விட்டே நாம் அவர்கள் பின்னால் சென்றோம். அப்போதும் எமது வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிள் ஒருவர் வந்தார். அவர் மாங்குள சந்திக்கு அருகில் வந்ததும் எம்மை முந்தி சென்று மாங்குள சந்தியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடிக்கு முன்னால் போய் நின்றார். 

அதனை தொடர்ந்து மாங்குள சந்தியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடியில் நாம் இரவு 9.20 மணியளவில் இராணுவ பொலிசாரினால் மறிக்கப்பட்டோம். எம்மை மறித்த இராணுவ பொலிசார் எமது சாரதியிடம் ஆனையிறவில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் உங்களை இராணுவத்தினர் மறித்த போது ஏன் வாகனத்தை நிறுத்த வில்லை என கேட்டார் அதற்கு எமது சாரதி வாகனத்தை யாருமே மறிக்கவில்லை என கூறினார்.

அவ்வேளை எமது வாகனத்தை சிவில் உடையில் இருந்தவர்கள் சுற்றி வளைத்து நின்றனர் அதில் ஒருவர் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தார், பின்னர் அவரும் எமது வாகன சாரதியிடம் ஏன் ஆனையிறவில் மறிக்கும் போது வாகனத்தை நிறுத்த வில்லை என கேட்டார் அவருக்கும் சாரதி வாகனத்தை யாரும் மறிக்கவில்லை என கூறினார்.

அதன் பின்னர் குறித்த நபர் வாகனத்தினுள் இருந்த எம்மை யார் என சாரதியிடம் கேட்டார்கள் அதற்கு சாரதி இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் கொழும்பு செல்கின்றனர் நான் ஹயருக்கு வந்ததாக கூறினார். அதனை அடுத்து அவர்கள் முன் இருக்கையில் இருந்த என்னிடம் கேட்டார்கள் எங்கே போகின்றீர்கள் என அதற்கு நான் சொன்னேன் கொழும்புக்கு ஒரு friend வீட்டை போறாம் ஏன் கேட்கின்றீர்கள் என கேட்டதும், உங்களை ஆனையிறவில் மறித்த போது நிற்காமல் வந்ததாக எமக்கு தகவல் கிடைச்சது அதனால தான் கேட்டோம் என்றார்கள்.

சிவில் உடையில் நின்றவர்கள் எம்மிடம் விசாரணை நடத்தும் போது இராணுவ பொலிசார் எதுவுமே கதைக்கவில்லை அத்துடன் எம்மிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தமிழிலேயே விசாரணை மேற்கொண்டார்கள் பின்னர் எம்மிடம் விசாரணை மேற்கொண்ட சிவில் உடையில் நின்றவர் தொலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் யாராவது ஒருவர் IC யை பதிந்து விட்டு செல்லுங்கள் என கூறினார்.

அதனை அடுத்து நான் இறங்கி சென்று எனது IC பதிவினை சோதனை சாவடியில் மேற்கொண்டு இருந்த போது (எனது IC பதிவை சிவில் உடையில் இருந்தவரே மேற்கொண்டார். அப்போதும் எனது உள் மனசு சொன்னது ஆணையிறவில் வாகனத்தை மறித்த போது நிறுத்தாது வந்திருந்தால் அது சாரதியின் தவறு எதற்காக எமது பதிவினை மேற்கொள்ள வேண்டும் என கேள் என்று பிறகு யோசித்தேன்.

இதில் நின்று இவர்களுடன் எதற்காக முரண்படுவான் என விட்டு விட்டேன் எனது பதிவினை மேற்கொண்டு இருந்தவரிடம் தொலைபேசியில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த சிவில் உடைதாரி வந்து கூறினார் வானில் இருக்கும் மிகுதி 6 பேரின் IC யையும் வாங்கி பதியுமாறு கூறிவிட்டு அவர் என்னிடம் கூறினார்

வானில் இருந்து மற்றவர்கள் இறங்க தேவையில்லை அவர்களில் IC யை மட்டும் வாங்கி வருமாறு நான் அதனை வாகனத்தில் இருந்தவர்களிடம் கூறிய போது முன்னுக்கு இருந்தவர்கள் தாம் இறங்கி வந்ததுடன் பின்னுக்கு இருந்தவர்கள் தமது ic தந்து விட்டு வாகனத்தினுள் இருந்தார்கள் எங்கள் 7 பேரின் ic யையும் சிவில் உடையில் இருந்த ஒருவர் பதிவினை மேற்கொண்டு கொண்டிருந்த போது மற்றைய சிவில் உடைதாரி வேறு யாருடனையோ தொலைபேசி தொடர்பிலையே இருந்தார்.

அப்போதும் நாங்கள் கேட்டோம் எதற்காக இந்த பதிவும் என அதற்கு அவர் ஆணையிறவில் இந்த வாகனத்தை மறித்த போது நிறுத்தாமல் வந்தற்காகவே என கூறினார் அப்போது நாம் கேட்டோம் வேறு ஏதாவது பிரச்சனை இல்லை தானே என அதற்கு அவர் இல்லை என்றே கூறினார் ஆனாலும் எமது ic பதிவினை மேற்கொண்ட போது வழமைக்கு மாறாக பிறந்த திகதி எல்லாம் பதிந்தார் (வழமையாக ic பதியும் போது பெயர் , ic இலக்கமும், விலாசம் என்பவற்றையே பதிவர்கள்) எமது பதிவுகளை முடித்த பின்னர் எங்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தார்கள்.

அங்கிருந்து எமது பயணத்தை தொடர்ந்தோம் ஓமந்தை இராணுவ சாவடியை இரவு 9.50 மணியளவில் சென்றடைந்தோம். அங்கு எமது வாகனத்திற்கு மட்டும் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு ஒரு 2ம் லெப்டினன் தர அதிகாரியின் தலைமையில் 5 இராணுவத்தினர். எமது வாகனத்தை சுற்றி வளைத்து எம்மை வாகனத்தை விட்டு கிழே இறங்க பணித்தனர்.

(மற்றைய வாகனத்தில் சாரதி மட்டும் இறங்கி சென்று பதிவினை மேற்கொண்டு விட்டு வாகனத்தை எடுத்து செல்கின்றனர்) கீழே இறங்கிய எங்கள் 7 பேரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டது அத்துடன் 3 இராணுவத்தினர் எமது வாகனத்தில் ஏறி சோதனை (ஒரு ஹயஸ் ரக வாகனத்தினுள் 3 பேர் ஏறி என்னத்த தேடினாங்களோ)

அதன் பின்னர் வாகனத்தில் தேடுதல் நடத்தியவர்கள் வாகனத்தின் பின்னால் உள்ள எமது bag க சோதனை செய்ய வேண்டும் அதனை திறந்து காட்டும் மாறு எமக்கு கூறினார்கள் அதன் போது நானும் இன்னும் மூவருமாக சென்று எமது Bag கை திறந்து காட்டிக்கொண்டு இருந்த போது எம்முடன் வந்த இருவர் வாகனத்தினுள் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து இருந்துள்ளார்கள். மற்றும் ஒருவர் எமது வாகனத்திற்கு முன்னால் நின்று எமது வாகனத்தை பார்த்து கொண்டு நின்றார்.

அவ்வேளை ஒருவிதமான தாடி கட்டுடன் இராணுவ சீருடையில் (இராணுவ சீருடை அணிபவர்கள் வித்தியாசமான தாடி கட் விட முடியாது என நினைக்கிறேன் ) வந்த ஒருவர் சாரதியின் இருக்கை பக்கம் உள்ள வாகன யன்னல் வழியாக ஏதோ ஒன்றை போட்டு விட்டு எமது வாகனத்தை கடந்து சென்றார் அதனை வாகன பின் இருக்கையில் இருந்த இருவரும் வாகனத்தின் முன்னால் நின்ற ஒருவரும் கண்டுள்ளனர். குறித்த இராணுவ சிப்பாய் என்னத்த யன்னல் வழியாக உள்ளே போட்டார் என்பதை எடுத்து பார்க்க முதல் எங்கிருந்தோ வந்த இரு பொலிசார் அந்த பொருளை (சிகரெட் பொட்டி) தூக்கினார்கள். (அதெப்படி சரியா வந்தவுடன் அந்த போட்டியை சரியா அடையாளம் கண்டு உடனே தூக்கினாங்களோ ) 

பொலிசார் தாம் அங்கிருந்து எடுத்த சிகரெட் போட்டியினை எடுத்து கொண்டு வந்து வாகனத்தின் முன்னால் நின்றவரிடம் நீயா இந்த வாகனத்தில் வந்தனீ என கேட்டார் அதற்கு அவரும் ஓம் என்றார் இதற்குள் (சிகரெட் பொட்டி) என்ன இருக்கின்றது என தெரியுமா ? என அடுத்த கேள்வியை கேட்டார் அதற்கு அவர் போட்டவரை தான் கேட்கணும் என கூறி எமது வாகனத்தினுள் அந்த பொட்டியை போட்டவரை அடையாளம் காட்டினார்.

அவ்வேளை எங்கிருந்தோ வந்த சிவில் உடையில் (கட்டை கற்சட்டையுடனும் SLRC நுவரெலியா என பதிவிட்ட t சேட்டுடனும்) எம்மை நோக்கி தகாதவார்த்தையால் பேசியபடி வந்தவர் எம்முடன் நின்ற ஒருவரின் கையை பிடித்து இழுத்து தகாதவார்த்தையால் பேசிய படி வா என்றார்.

(சந்தேக நபரை தகாதவார்த்தையால் பேசலாம் என ஏதாவது இலங்கை சட்டம் சொல்கின்றதா ?) அப்போது அருகில் நின்ற நாம் கேட்டோம் எதற்காக அவரை இழுத்து செல்ல முற்படுகின்றீர்கள் ? நீங்கள் யார் என கேட்டோம் அதற்கு அவர் நான் தான் ஓமந்தை பொலிஸ் si என்று பெயர் சொன்னார் (அது தற்போது ஞாபகம் இல்லை) கஞ்சா கொண்டு சென்றதற்காக கைது செய்கின்றேன் என்றார்.

அப்போ நாங்கள் சொன்னோம் இந்த வாகனத்தில் இந்த 7 பேரும் தான் வந்தோம் அப்படியாயின் எங்கள் 7 பேரையும் கைது செய்யுங்கள் என்று அதற்கு அவர் அப்ப 7 பேரும் நடவுங்க என கூறிய போது எம்முடன் இருந்த ஒருவர் தனது தொலைபேசியில் முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்களுக்கு அறிவிக்கும் நோக்குடன் தொலைபேசியை எடுத்து காதில் வைத்தும் பொலிஸ் si ஒரு கையினால் அவரின் முகத்தை தள்ளி மறுகையால் அவருடைய தொலைபேசியை பறித்து எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு நடவுங்கள் என தகாதவார்த்தையால் பேசினார். ( ஒருவரை கைது செய்தால் அவர் தனது கைது தொடர்பாக பிறிதொருவருக்கு அறிவிக்கும் உரிமை உண்டு தானே? )

 நாங்கள் வாறோம் என்று சொல்லி சம்பவத்தை எமது சாரதியிடம் சொல்ல போனால் சாரதி அதுவரை பதிவை மேற்கொள்ளவில்லை (ஓமந்தை சோதனை சாவடியில் இவ்வளவு பிரச்சனையும் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்கும் வரை எமது வாகனத்தை சோதனை சாவடியில் இருந்த இராணுவ சிப்பாய் பதிவினை மேற்கொள்ளாமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார்.) 

வாகனம் வரும் நீங்க நடவுங்கள் என தகாதவார்த்தையால் எம்மை பொலிஸ் si பேசினார் அதனை அடுத்து நான் ஓமந்தையில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியை நோக்கி (200 மீற்றர்) நடந்து கொண்டிருந்த போது எம்முடன் வந்த மற்றுமொருவர் தொலைபேசியில் முன்னுக்கு வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவிக்க முற்பட்ட போது குறித்த si அவருடைய கழுத்தில பிடித்து அவரின் தொலைபேசியையும் பறித்தெடுத்தார்.

அதன் பின்னர் கடைசியாக சென்ற இருவரில் ஒருவர் முன்னால் சென்ற பொலிசாருக்கு தெரியாமல் தொலைபேசியில் முன்னுக்கு வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவிக்க நான் பொலிசாருக்கு தெரியாமல் எனது தொலைபேசியில் இருந்து tweet பண்ணினேன். அதோடு எம்மை ஓமந்தை சோதனை சாவடியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மறித்து வைத்து அங்கிருந்த புத்தகம் ஒன்றில் சிவப்பு பேனாவால் ஏதோ சிங்களத்தில் எழுதி கொண்டு இருக்க எனது tweet பார்த்த ஒருத்தன் எனது தொலைபேசிக்கு உடனே போன் பண்ணினான். 

அதோட எனது தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஏனைய அனைவரினது தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகள் என்பன பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. (முறைப்பாட்டை பதிவு செய்ய முன்னர் சந்தேக நபர்களின் தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகளை பறிக்கும் உரிமை பொலிசாருக்கு உண்டா ?) அதன் பின்னர் எங்கே சிவப்பு பேனையால் ஏதோ சிங்களத்தில் பதிவினை மேற்கொண்டு விட்டு சிவில் உடையில் இருந்த si பொலிஸ் சீருடைக்கு மாறி எம்மை மீண்டும் தூசணத்தால் பேசி நடவுங்கள் என்றார்.

எம்மை எமது வாகனத்தில் ஏற்றி தானும் ஓமந்தையில் எங்கள் வாகனத்தில் இருந்து கஞ்சா சிகரெட் போட்டியை மீட்ட இரு பொலிசாரையும் அழைத்து கொண்டு எம்மை எங்கோ அழைத்து சென்றார் அதன் போது நாம் எங்களை எங்கே அழைத்து செல்கின்றீர்கள் என்ற கேட்ட போது அது போனதுக்கு அப்புறம் தெரியும் வாயை மூடுங்கள் என்று தூசணத்தால் பேசினார். 

(பொலிசார் எம்மை கைது செய்து கொண்டு செல்லும் போது எங்கே கொண்டு செல்கின்றோம் என்பதை எம்மிடம் கூற தானே வேண்டும் ? ) நேராக எம்மை ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எம்மை அங்கே உட்காரும் படி பணித்ததுடன் எம்மை நாளை நீதிபதி முன்னால் முற்படுத்தியே விடுதலை செய்வோம் என கூறினார் அப்போது நாம் இன்னும் இரவு சாப்பாடு சாப்பிட வில்லை எமக்கு பசிக்குது சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்யும் படி பொலிசாரிடம் கேட்டோம்.

அவர்கள் அதற்கு பதிலே சொல்லவில்லை பச்சை தண்ணியே தந்தார்கள். (பொலிசார் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் போது அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க தானே வேண்டும்) அவ்வேளை எமக்கு முன்னால் வாகனத்தில் சென்றவர்கள் திரும்பி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்து சிறிது நேரத்தில் வவுனியா ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தார்கள். அதனை அடுத்து ஓமந்தை பொலிஸ் நிலையம் பரபரப்பு அடைந்தது. அதை அடுத்து எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட எமது கைத்தொலைபேசிகள் , அடையாள அட்டைகள் என்பன எம்மிடம் திருப்பி தரப்பட்டு ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்முடன் சமர பேச்சுக்களை நடாத்த தொடங்கினார்.

எமது உடமையில் இருந்து கஞ்சா பொட்டி கைப்பற்றபடாததால் எங்கள் 7 பேரையும் விடுதலை செய்வதாகவும் வாகன சாரதியினையும் வாகனத்தையும் நீதவான் முன் முற்படுத்தி விடுவிப்பதாகவும் கூறினார் அத்துடன் மீட்கபட்ட கஞ்சா சிறிய அளவு என்பதனால் உடனேயே பிணையில் எடுக்கலாம் எனவே நீங்கள் இவை பற்றி கவலை படாமல் செல்லுங்கள் நான் வேணும் என்றால் நீங்கள் செல்ல வேறு வாகன வசதி செய்து தருவதாகவும் கூறினார். 

அதன் பின்னரே சாரதி இலக்கானார் (சுமார் ஒரு மணி நேரம் நாங்கள் 7 பேருமே பொலிசாரின் இலக்காக இருந்தோம் அந்த ஒரு மணி நேரம் வரை சாரிதியின் தொலைபேசியோ அடையாள அட்டையோ பறிமுதல் செய்யப்படவும் இல்லை அவரிடம் எந்த விதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை ஏன் அவ்வளவு தகாதவார்த்தையால் எங்களை பேசிய பொலிஸ் si கூட சாரதியை ஒரு வார்த்தை கூட பேசவில்லை) அவரின் இந்த சமரச முயற்சிக்கு நாம் உடன் பட மறுத்தோம்.

ஏனெனில் இராணுவத்தினர் போட்ட கஞ்சா பொட்டியினை தான் பொலிசார் மீட்டனர் வாகன சாரதியை விடுவிக்கா விட்டால். நாம் முறைப்பாடும் செய்வோம் இராணுவத்தினர் போட்ட கஞ்சாவை தான் பொலிசார் மீட்டதாக எனவே எமது முறைப்பாட்டை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என கோரினோம் அதற்கு அவர் உங்கள் முறைப்பாட்டை பதிய வேண்டும் ஆயின் ஓமந்தை இராணுவ சாவடியில் உள்ள இராணுவத்தினரின் வாக்கு மூலம் பெற வேண்டும் என கோரி ஒரு பொலிஸ் குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

(சிவில் பொலிசார் இராணுவத்தினரை விசாரித்து வாக்கு மூலம் பெறலாமா ?) ஓமந்தை சோதனை சாவடிக்கு இராணுவத்தினரின் வாக்கு மூலம் பெற்று வருவதாக கூறி சென்ற பொலிஸ் குழுவினர் சுமார் 3 மணிநேரம் ஆகியும் வராததால் நாம் பொறுமை இழந்தோம். ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் A 9 வீதியை இரவு 2 மணியளவில் மறித்து எமது முறைப்பாட்டை பொலிசார் ஏற்க வேண்டும் என போராட்டம் நடாத்தினோம்.

எமது போராட்டத்தை அடுத்து இரவு 2.30 மணியளவில் எமது முறைப்பாட்டை ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து நாம் எமது போராட்டத்தை கைவிட்டோம். பின்னர் இரவு 3 மணியளவில் எமது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொண்டார்கள் அந்த முறைப்பாட்டில் இராணுவத்தினர் வைத்த கஞ்சா பொட்டியினை தான் பொலிசார் மீட்டார்கள் என குறிப்பிட்டதுடன் பொலிசார் எம்மை தாக்கமுற்பட்டமை தொடர்பிலும் தாகத வார்த்தைகளால் எம்மை பேசியமை மற்றும் எம்முடன் அநாகரிகமாக நடந்து கொண்டமை தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தோம்.

அதனை தொடர்ந்து எம்மை 4.30 மணியளவில் செல்ல பொலிசார் அனுமதித்தார்கள். ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக எம்மை தடுத்து வைத்திருந்த போது எமக்கு பல உதவிகளையும் எமக்கு ஆதரவாகவும் வவுனியாவை சேர்ந்த 3 ஊடகவியலாளர்கள் செயற்பட்டனர்.

6 மணிநேரமாக எம்முடன் நின்ற அவர்களுக்கு எமது நன்றிகள் … அத்துடன் நேரில் வந்து எமக்கு ஆதரவாக நின்ற வடமாகாண சபை உறுப்பினர் Dr. சிவமோகன் அவர்களுக்கும் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கும், எம்மை தடுத்து வைத்தமை தொடர்பாக செய்திகளை வெளியிட்டவர்களும் எமது நன்றிகள் … என தெரிவித்த மயூரன்.

பொலிசார் எம்மை விடுவித்த பின்னர் அதிகாலை 5 மணியளவில் பிறிதொரு வாகனத்தை வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒழுங்கமைத்து தர நாம் அதில் கொழும்பு நோக்கி பயணித்தோம் கொழும்பு இதழியல் கல்லூரியை சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்றடைந்து அங்கு தேநீர் அருந்தி விட்டு நாம் எமது தங்குமிடம் நோக்கி சென்று 30 நிமிடங்களில் இதழியல் கல்லூரிக்கு முன்னால் சிங்கள அமைப்பு ஒன்று பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்காதே என போராட்டம் நடாத்தியது. 

அதனை அடுத்து எமது பயிற்சி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு எமது தங்குமிடத்திலேயே தங்க வைக்கப்பட்டோம் அதனை அடுத்து மறுநாள் காலை (நேற்று ஞாயிற்று கிழமை) கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்து மாலை 6 மணியளவில் யாழை வந்தடைந்தோம். இது தான் சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் உகத் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு :- அதேவேளை ஓமந்தை பொலிசாரினால் இன்று மதியம் (28) தமக்கு தொலைபேசி அழைப்பின் ஊடக நாளை செவ்வாய் கிழமை மதியம் 11மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எமது முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.